“மெட்ரோ ரயில் சேவைக்கு முதலில் ஜெயலலிதாவுக்கே நன்றி சொல்ல வேண்டும்…” - முதல்வர் எடப்பாடி உருக்கம்
சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கான துவக்க விழா, இன்று நடந்தது. அதில், குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மெட்ரோ ரயிலுக்கான முதல் நன்றியை ஜெயலலிதாவுக்கே கூற வேண்டும் என தெரிவித்தார்.
விழாவில் அவர் பேசியதாவது:- மெட்ரோ ரயில் திட்டம், சென்னையி தற்போதுள்ள பெருமளவு போக்குவரத்து நெரிசலை குறைக்கும். இதனால், பயணிகள் நிம்மதியுடன் சென்று வருவார்கள்.
இந்த திட்டத்தை தொடங்குவதற்கு, மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு உறுதுணையாக இருந்தார். அவருக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த மெட்ரோ ரயில் திட்டம் துவங்குவதற்கான முதல் நன்றியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரிவிக்க வேண்டும்.
அதேபோல் தமிழகத்தில், அரசு டிஜிட்டல் கேபிள் நிறுவனத்துக்கான உரிமம் வழங்கியதற்கு, மத்திய தொலை தொடர்பு துறைக்கு நன்றியை தெரிவிக்கிறேன். அரசின் திட்டத்துக்கு தேவையான நிதியை முழுமையாக ஒதுக்கியது அதிமுக அரசு.
தற்போது தொடங்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவை பல்வேறு சிறப்பம்சங்களுடன் தொடங்கப்படுகிறது. திமுக ஆட்சியின் போது தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் பணிகள் மந்தமாக நடைபெற்றது.
பின்னர், ஆட்சி பொறுப்பை ஏற்ற அதிமுக அரசு, அந்த பணியை விரைவாக முடித்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. மெட்ரோ ரயில் சேவைக்கான கூடுதல் நிதியை பெற்றுத்தந்த வெங்கய்ய நாயுடுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.