"பதவி வெறி எடப்பாடி கண்ணை மறைத்து விட்டது.. பொது குழுவா அது, காட்டுமிராண்டி கூட்டம்.. டார் டாரா கிழித்த வைத்தி
நீதிமன்ற உத்தரவை மீறி அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை தேர்ந்தெடுத்தது செல்லாது என்றும், பதவி வெறி எடப்பாடி பழனிசாமியின் கண்ணை மறைத்து விட்டது என்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் காட்டமாக விமர்சித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறி அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை தேர்ந்தெடுத்தது செல்லாது என்றும், பதவி வெறி எடப்பாடி பழனிசாமியின் கண்ணை மறைத்து விட்டது என்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் காட்டமாக விமர்சித்துள்ளார். இன்று நடந்த பொதுக் குழு எடப்பாடி பழனிச்சாமியின் சர்வாதிகாரம் என்றும் கூறினார்.
பரபரப்பான சூழலில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று கூடியது. அதில் ஒற்றை தலைமை உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் பாதியிலேயே முடிந்தது. ஆனால் ஒற்றை தலைமை எடப்பாடி பழனிச்சாமி தான் என்பதை கூட்டம் உறுதி செய்துள்ளது. மறுபுறம் பகிரத சட்ட போராட்டத்திற்கு பின்னர் புதிய தீர்மானங்கள் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட கூடாது என்ற நீதிமன்ற உத்தரவுடன் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொண்டார்.
எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கு முன்பாகவே ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தில் ஆஜரானார். அப்போது அங்கிருந்த எடப்பாடி ஆதரவாளர்கள் ஓபிஎஸ்சுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பியவாறு இருந்தனர். பின்னர் எடப்பாடி பழனிச்சாமியும் வந்து கலந்து கொண்டார். ஓபிஎஸ் இபிஎஸ் ஒரே மேடையில் காட்சி தந்தனர். பின்னர் பொதுக்குழுவை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதாக ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். எடப்பாடி பழனிச்சாமி அதை வழிமொழிந்தார். அப்போது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட 23 தீர்மானங்கள் முன்மொழியப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி சண்முகம் ஒட்டுமொத்த தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவாதாக ஆவேசமாக கூறினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய கே.பி முனுசாமி, பொதுக்குழு தீர்மானங்கள் நிராகரிக்கப்படுகிறது, ஒற்றைத் தலைமையே ஒரே தீர்வு, மீண்டும் எப்போது பொதுக்குழு கூடுகிறதோ அப்போது ஒற்றைத் தலைமை தீர்மானத்துடன் மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என கூறினார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதில் ஒட்டுமொத்த அரங்கமும் அதிர்ந்தது. பின்னர் பேசிய சி.வி சண்முகம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உறுப்பினர்களின் கோரிக்கைக்கிணங்க வரும் ஜூலை 11ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என அறிவித்தார். அவரைத் தொடர்ந்து வேலுமணி பேச முற்பட்டபோது, மேடையிலிருந்து வேக வேகமாக பன்னீர் செல்வம் வைத்திய லிங்கம் உள்ளிட்டோர் இறங்கிச் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். எடப்பாடி பழனிச்சாமி இன்று ஒற்றை தலைமையாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டம் பாதியில் முடிந்துபோனது. மேடையில் இருந்து இறங்கும் போது பேசிய வைத்தியலிங்கம், சட்டத்துக்கு புறம்பாக நடக்கும் இந்த பொதுக்குழுவை புறக்கணிப்பதாக கூறினார். இதனையடுத்து கிரின்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்ளிடம் பேசிய வைத்தியலிங்கம், நீதிமன்ற உத்தரவை மீறி அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றார்.
பதவி வெறி எடப்பாடிபழனிசாமியின் கண்ணை மறைத்து விட்டது அவர்கள் நடத்திய ஓரங்க நாடகம் அரை மணி நேரத்தில் முடிந்துபோனது. இந்தப் பொதுக்குழு எடப்பாடி பழனிச்சாமியின் சர்வாதிகாரத்தை காட்டுகிறது என்றார். பொதுக்குழு மேடைக்கு கீழே இருந்தவ 2500 க்கும் மேற்பட்ட கூலிக்கு மாரடிக்கும் கும்பல் என்றும் அது கட்டுப்பாடு இல்லாத காட்டுமிராண்டித்தனம் மான கும்பல் என்றும், சட்டத்திற்கு புறம்பான பொதுக்குழு நடந்துள்ளது என்றும் அவர் விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி என்றும் நாங்கள் தயார், இந்த பொதுக் குழு கூட்டம் அரைமணி நேரத்தில் நடந்து முடிந்த ஓரங்க நாடகம் என கடுமையாக விமர்சித்தார்.