எடப்பாடி என்ற பெயருக்கே களங்கம் விளைவித்து, துரோகம் செய்தவர் - டி.டி.வி யாரை சொல்கிறார் தெரிகிறதா?
திருப்பூர்
எடப்பாடி என்ற பெயருக்கு களங்கம் விளைவித்து அதன் பெயரை தாங்கி கழகத்திற்கு துரோகம் இழைத்தவர் தமிழக அரசியலில் முன் உதாரணமாக உள்ளார் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. அ.ம.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்க சேலம் மாவட்டம், எடப்பாடிக்கு வந்தார்.
அப்போது அவருக்கு, வெள்ளாண்டிவலசை காளியம்மன் கோவில் அருகில் எடப்பாடி நகர செயலாளர் பூக்கடை சேகர், பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வெங்கடாஜலம் தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன் செங்கோல் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், திருமண மண்டபத்திற்கு சென்று மணமக்களை டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. வாழ்த்திப் பேசினார்.
அப்போது அவர், "தமிழக வரலாற்றிலேயே எடப்பாடி எந்த அளவிற்கு பெயர் பெற்றுள்ளது என்பது உங்களுக்கு தெரியும். அதற்கு காரணமாக நாங்களும் இருந்துள்ளோம் என நினைக்கும்போது சற்று வருத்தமாகதான் உள்ளது.
இந்தத் தொகுதியில் 1986–ஆம் ஆண்டு ஜெயலலிதா தனித்து நின்றபோது சேவல் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளருக்கு ஜெயலலிதா பிரசாரம் செய்ய வந்தார். அப்போது நானும் எடப்பாடிக்கு வந்தேன். அப்போதைய வேட்பாளர் வெற்றி பெற்றார்.
அதிலிருந்து 2016–ஆம் ஆண்டு வரை ஜெயலலிதாவின் கோட்டையாக எடப்பாடி திகழ்கிறது என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஆனால், எடப்பாடி என்ற பெயருக்கு களங்கம் விளைவித்து அதன் பெயரை தாங்கி கழகத்திற்கு ஒரு சிலர் துரோகம் இழைத்து தமிழக அரசியலில் முன் உதாரணமாக உள்ளனர்.
அதனை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வருங்காலத்தில் தமிழகத்தில் எப்பொழுது தேர்தல் வந்தாலும் எடப்பாடி, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களை கொண்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோட்டை என நிருபிக்கப்படும்.
எங்களை எதிர்கின்ற இந்த ஆட்சி நாட்கள் எண்ணப்படுகின்றன. இந்த இயக்கத்திற்காக 18 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை தியாகம் செய்துள்ளனர். அவர்கள் பதவி பறிபோனபிறகு அதற்காக நீதிமன்ற தீர்ப்பிற்கு காத்திருக்கிறோம்.
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நிச்சயம் நீதி வெல்லும். வென்ற பிறகு எந்த நேரத்திலும் இந்த ஆட்சி முடிவுக்கு வரும். மீண்டும் எடப்பாடி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோட்டையாக மாறும். அதற்கு அம்மாவின் தொண்டர்கள் உறுதுணையாக இருப்பார்கள்" என்று அவர் பேசினார்.