edappadi letter to modi
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கபட்டுள்ள தமிழக மீனவர்கள் 10 பேரை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 6 ஆம் தேதி ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்தார்.
இதனால் மீனவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மீனவர்கள் பிரட்சனைக்கு நிரந்த தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து மத்திய அமைச்சர்கள் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதனால் போராட்டத்தை கைவிட்டு மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
இந்நிலையில், இலங்கை கடற்படை மீண்டும் 10 தமிழக மீனவர்களை சிறைபிடித்து சென்றுள்ளனர். மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :
6-3-2017 அன்று இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதில் பிரிட்ஜோ என்ற அப்பாவி இந்திய மீனவர் பலியானார்.
அதன்பின்னர், இலங்கை சிறைகளில் இருந்த 85 மீனவர்கள் விடுவிக்கப்பட்டபோதிலும், இன்று மீண்டும் மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை இலங்கை கடற்படை மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

பாக் நீரிணையில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை கடற்படை சிறைப்பிடித்து சென்றுள்ள 10 மீனவர்கள் மற்றும் 129 படகுகளை விடுவிக்க வெளியுறவுத்துறை மூலம் தாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மீனவர்கள் பயனடையும் வகையில், சிறப்பு தொகுப்பு திட்டத்திற்காக கேட்கப்பட்ட 1,650 கோடி ரூபாய் நிதியை விரைவாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
