கேரள அரசிடம் தண்ணீர் கேட்க முடிவு ! நாள்தோறும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்ப முடியுமா ? என பினராயி விஜயனுக்கு கடிதம்…
கேரளா குடிநீர் வாரியம் சார்பில் நாள்தோறும் 20 லட்சம் லிட்டர் குடிநீரை ரயில் மூலம் சென்னைக்கு அனுப்ப முடியுமா என கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதப் போவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாம் தெரிவித்துள்ளார்.
பருவ மழை பொய்த்ததால் தமிழ்நாடு முழுவதும் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 4 குடிநீர் ஏரிகளும் வறண்டு விட்டதால் இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் மக்களை மிக கடுமையாகப் பாதித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தந்து உதவ கேரளா முன்வந்ததது. ஆனால் முதலமைச்சர் அலுவலகம் தற்போதைக்கு தண்ணீர் வேண்டாம் என மறுத்தாக தகவல் வெளியானது.
ஆனால் அதற்கு மறுப்புத் தெரிவித்த அமைச்சர் வேலுமணி , நாளை நடைபெறும் முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனைக்கு கூட்டத்துக்குப் பிறகு இது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தண்ணீர் பிரச்சனை தொடர்பாக சென்னையில் இன்று ஆலோசனை நடத்திய முதலமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது, தமிழகத்திற்கு ஒருமுறை 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தருவதாக கூறியதற்கு கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என கூறினார்.
ஆனால் இனி நாள்தோறும் 20 லட்சம் லிட்டர் தர முடியுமா? என கேட்டு கேரள முதல்வருக்கு கடிதம் எழுத முடிவு எடுத்துள்ளோம் எனவும் எடப்பாடி தெரிவித்தார்.
.
எனது வீட்டுக்கு லாரிகள் மூலம் அதிக அளவு தண்ணீர் வழங்குவதாக கூறப்படுவது தவறானது. முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வீடுகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் வழங்குவது வழக்கமானதுதான்.
அமைச்சர்களின் குடும்பங்களுக்கு மட்டுமே இவ்வளவு தண்ணீர் பெறப்படுவதில்லை. அமைச்சர்களை சந்திக்க வருபவர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கும் சேர்த்துதான் தண்ணீர் பெறப்படுகிறது.