இவர்கள் அரசியலுக்கு வர என்ன தகுதி இருக்கிறது? தி.நகரில் தீயாய் கர்ஜித்த எடப்பாடி...
தமிழகத்தில் புயல், மழை, மக்கள் பெரும் இன்னல்களை சந்திக்கும் போது நீங்கள் எங்கே போனார்கள்? சினிமாக்காரர்களே கட்சித் தொடங்குவது என்பது சினிமாக் காட்சியா? மக்களைப்பற்றி சிந்திக்காத, அவர்களுக்காக உழைக்காத நீங்கள் அரசியலுக்கு வருவது தேவையில்லாதது.
ஆனால், ஒரு நாடிகராகவும், அரசியல் தலைவராகவும் இன்றளவும் மக்கள் மனதில் இன்னும் எம்.ஜி.ஆர் வாழ்ந்து கொண்டு இருப்பதற்கு அவரின் மக்கள் நலத்திட்டங்களே காரணம். மக்கள் தலைவருக்கு பிறந்தநாள் கொண்டாடுவதில் பெருமைப்படுகிறோம்'' என்று சென்னை தி.நகரில் பேசிய விழாவில் தீப்பறக்க பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அவர் பேசுகையில், ''மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் புரட்சித்தலைவர். ஏழை எளிய மக்கள் மட்டுமல்ல; யார் யாருக்கு என்னனென்ன தேவை என்று அறிந்து தாயைப்போல அவர்களுக்கு நலத்திட்டங்களை வாரி வழங்கியதால் தான் அவர் இன்னும் மக்கள் மனதில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதனால் தான் அவருக்கு பிறந்தநாள் விழா எடுப்பதில் பெருமைப்படுகிறோம்.
இப்போதெல்லாம் அரசியலுக்கு வருவோம் என்று சொல்கிறவர்கள், மக்களை எப்போதாவது சந்தித்திருக்கிறார்களா? புயல், மழை என மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்த போது இவர்கள் எங்கே போனார்கள்? அரசியல் கட்சித் தொடங்குவது சினிமாக் காட்சியா? மக்களின் பிரச்னைகளாவது அவர்களுக்கு தெரியுமா? அவர்கள் மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை. அவர்களைப் பற்றிய எனக்கு கவலை இல்லை. மக்களுக்காக உழைக்காமல் அரசியலுக்கு வருகிறோம் என்று சொல்கிறார்கள். இவர்கள் எல்லாம் இப்படி என்றால், இன்னும் ஒரு சிலர், தங்களது குடும்பமே ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று அரசியல் செய்கிறார்கள்.
புரட்சித்தலைவரை வைத்தும் சிலர் அரசியல் செய்கிறார்கள். அவர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியும். இப்போது பேருந்து கட்டண உயர்வை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள். மக்கள் இந்த பேருந்து கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று பேசினார்.