பிரகாஷ் ஜவடேகரிடமும் சீட்டு நுனியில் அமரும் நம்ம முதலமைச்சர் - "இவ்வளவு பவ்யம் தேவையா?" என அதிகாரிகள் புலம்பல்
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் கூட சீட்டு நுனியில் அமர்ந்து எடப்பாடி பேசியதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி தற்போது 30 அமைச்சர்களில் ஒருவர் அல்ல.. 122 அதிமுக எம்எல்ஏக்களில் ஒருவர் அல்ல.அவர் ஒட்டுமொத்த தமிழகத்தின் ஆட்சி தலைவர் ஆவார்.
இப்படிபட்ட மாண்புமிக்க ஒரு பதவியில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அமைச்சரிடம் அதிக பவ்யம் காட்டியது தேவையற்றது என்கின்றனர் ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் .
ஜெ. உயிருடன் இருக்கும்போது ஒரு சில மத்திய அமைச்சர்கள் தவிர வேறு யாருக்கும் அப்பாயின்மென்டே கொடுக்கமாட்டார்.
ஜெ.வை சந்திக்க பலமுறை பாடுபட்டார்கள் மத்திய அமைச்சர்கள்.
அந்தளவிற்கு முதலமைச்சர் பதவிக்கான அந்த கவுரவத்தை மேம்படுத்தி இருந்தார் ஜெயலலிதா.
பணிவுக்கு புகழ்பெற்ற ஓபிஎஸ் கூட இந்தளவுக்கு இறங்கி வரவில்லை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தபோது எந்த மாநில முதல்வரும் செய்யாத வகையில் மோடியின் கையை பிடித்து கொண்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு குனிந்து வணக்கம் செலுத்தினார்.
அந்த புகைப்பட காட்சியே பலரையும் அதிர்ச்சியடைய செய்தது.
இந்த நிலையில்தான் நேற்று தமிழகத்துக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் பரகாத் ஜவடேகரை எடப்பாடி பழனிசாமி தலைமயிலான அமைச்சர்கள் சந்தித்தனர்.
நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரியும் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பிரகாஷ் ஜவடேகரிடம் எடுத்து கூறினார்.
இதில் உச்சகட்ட கொடுமை என்னவென்றால் பிரகாஷ் ஜவடேகர் எடப்பாடியை சந்திக்க அவரது கிரீன்வேஸ் சாலை இல்லத்துக்கே வந்தாரே தவிர இவர் போய் பார்க்கவில்லை.
அதிலும் குறிப்பாக எடப்பாடி உட்கார வேண்டிய முதலமைச்சருக்கான செட்டில் அவர் உட்காராமல் அதில் பிரகாஷ் ஜவடேகரை உட்கார வைத்து விட்டு எதிரே இருந்த அமைச்சர்கள் வரிசையில் உட்கார்ந்து கொண்டார் எடப்பாடி.
சாவகசமாக பிராகாஷ் ஜவடேகர் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்க எதிர்திசையில் அமைச்சர்களோடு அமைச்சர்களாக அமர்ந்திருந்த எடப்பாடி சீட்டு நுனியிலும் உடன் சென்றிருந்த அமைச்சர்கள் கே.பி அன்பழகன், விஜயபாஸ்கர் ஆகியோரும் ரிலாக்சாக அமர்ந்திருந்தது கவனிக்கத்தக்கது.
டெயில் பீஸ் – ஜெயலலிதா இருக்கும்போது ஓபிஎஸ் முதல் கடைநிலை அமைச்சர் வரை தன்னிடம் மட்டும்தான் பவ்யம் காட்டவேண்டும். பிரதமராக இருந்தாலும் சரி ஜனாதிபதியாக இருந்தாலும் சரி அவர்களை வரவேற்கும்போதும் அல்லது நேரில் சென்று பேசும்போதும் அந்த க்ரிப்பை விட்டுவிட கூடாது என்பதில் ஜெ. கவனமாக இருப்பார் என்பது அதிமுகவில் நிலவி வந்த நடைமுறையாகும்.