போகுமிடமெல்லாம் புஸ்வாணம்தானா? எக்கச்சக்க எரிச்சலில் எடப்பாடி...
கலைஞரும், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தவமிருந்து பெற்ற, தலைகீழ் நின்று பார்த்தும் ஸ்டாலினுக்கு இதுவரையில் வாய்த்திடாத முதல்வர் பதவி பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் சைடு ஜன்னல் வழியாக சர்வசாதாரணமாக வந்து சேர்ந்தது அரசியல் ஆச்சரியம்தான். சாமான்யப்பட்ட அதிகாரமா இது?
ஆனாலும் கூட, தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடியார் இன்முகமாக இல்லை என்றே அவரை சுற்றியிருப்போர் சொல்கிறார்கள். காரணம், தன் பதவிக்கேற்ற மரியாதை அனைத்து மட்டத்திலும் கிடைக்கவில்லை என்று ஏங்குகிறாராம்.
சமீப சில நாட்களுக்கு முன் மதுரையில் சில நிகழ்வுகளில் கலந்து கொள்ள சென்றிருந்தார் எடப்பாடியார். ஒரு முதல்வரின் பங்ஷனுக்கு உரித்தான கூட்டமோ அல்லது கெத்தோ அங்கே உருவாக்கப்படவில்லை. மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்ட அமைச்சர்கள் சிரத்தை எடுத்து ஏற்பாடுகளை செய்யவில்லை என்று முதல்வருக்கு ஆதங்கம். இதற்கு காரணம், கொங்கு மண்டலத்தின் ஆதிக்க சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் முதல்வராக இருப்பதை தென் மண்டலத்து ஆதிக்க சமுதாயத்தினர் பெரிதும் விரும்பவில்லை என்பதுதான் என்று பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் திருப்பதிக்கு ஏழுமலையான தரிசிக்க சென்றிருந்தார் எடப்பாடியார். அங்கும் அவருக்கு தடபுடல் வரவேற்புகள் காட்டப்படவில்லையாம். இதற்கு முன் தமிழக முதல்வராக இருந்தவர்கள் சென்ற போது காட்டப்பட்ட பவ்யத்தை கூட தன்னிடம் காட்டிட வேண்டாம், அட்லீஸ்ட் தேவஸ்தானத்தின் முக்கிய மனிதர்கள் அத்தனை பேரும் ஆஜராகி, பாரம்பரிய முறைப்படி சில சடங்குகளை செய்து வரவேற்பதும், கூடவே வந்து சிறப்புகளை செய்து வழிபட வைப்பது, அதே மரியாதைகளுடன் வழியனுப்பி வைப்பது போன்றவை கூட செய்யப்படவில்லை என எடப்படியாரின் அடிப்பொடிகள் முணங்கியுள்ளன. எடப்பாடியும் இதையெல்லாம் கவனித்து வைத்து அப்செட் ஆனாலும் கூட அதை வெளியில் காட்டவில்லையாம்.
முதல்வருக்கான பாதுகாப்பு போன்றவற்றில் குறையேதுமில்லை ஆனால் சிலிர்ப்பான வரவேற்பும், உபசாரங்களும் பாதிக்கு மேல் மிஸ்ஸிங் என்பதே அவரின் வருத்தம். இதற்கு பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது என்றே எடப்பாடியார் தரப்பு நினைக்கிறது. லட்டு கொடுக்கிறவங்க இப்படி நம்ம வரவேற்பு விஷயத்துல அல்வா கொடுத்துட்டானுங்களே என்பதுதான் கடுப்பாம்.
இப்படி எங்கே தான் போனாலும் அந்த நிகழ்வுகள் புஸ்வான்மாகவே போகின்றனவே, ஒரு முதல்வருக்கான அதிரடி சரவெடிகள் எதுவும் நிகழ்வதில்லையே என்று எரிச்சலில் இருக்கிறாரம் அவர்.
சரி விடுங்க தல! பா.ஜ.க. கூட டை அப் போட்ட பிறகு தேடி வந்து வணங்குவாங்க தேவஸ்தான பசங்க.