வாயும் வாய்மையும் தான் பலம்..! தமிழகத்தில் திமுகவை வீழ்த்த எந்த கொம்பனும் கிடையாது- துரைமுருகன்
திமுக வளர்ந்தது பேச்சு மற்றும் எழுத்தால் தான். திமுக மீது உள்ள பற்று காரணமாக அதிக அளவு இளைஞர்கள் திமுகவில் இணைகிறார்கள். தற்போதைய இளைஞர்கள் புலிக்குட்டிகளாக உள்ளதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் டி.கே.சீனிவாசன் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட, அந்த புத்தகத்தின் முதல் பிரதியை திராவிடக் கழக தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், திமுக 1967இல் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவுடன், தமிழக அரசாங்க சின்னத்தில் ’சத்தியமேவ ஜெயேதே’ என்ற வாக்கியம் இருந்தது.
இதற்கு தமிழில் எந்த வார்த்தை இடம்பெற வேண்டும் என்று முதலமைச்சர் அண்ணா கேட்டாராம். அதற்கு நாவலர், சத்தியம் என்றால் உண்மை. உண்மை வெல்லும் என்று போடலாம் என தெரிவித்துள்ளார். அதற்கு கலைஞர் ’வாய்மையே வெல்லும்’ என்று கூறினாராம். இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்கையில், எங்கள் வாயும் எங்கள் மையும் தான் வென்றுள்ளது என்று அப்போது கலைஞர் கருணாநிதி கூறினார். அவர் கூறியதுபோல், திமுகவுக்கு வாயும், வாய்மையும் தான் பலம். அதை வெல்ல தமிழகத்தில் எந்த கொம்பனுக்கும் அருகதை கிடையாது என துரைமுருகன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், இளைஞர்கள் அதிகளவு புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும். அந்த ஆர்வத்தை இளைய சமுதாயத்தினர் பெற வேண்டும் என வலியுறுத்தினார். இளைஞர்கள், அரசியல் மற்றும் திராவிட தலைவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை என்றாலும் அறிந்திருக்கவாவது வேண்டும் என கூறினார். எனவே இளைஞர்கள் பழைய புத்தகங்கள், நாளிதழ்கள் ஒதுக்காதீர்கள். அங்கு தான் பலம் புரிந்த ஆயுதம் உள்ளதாக குறிப்பிட்டார். புத்தகம் தான் நமக்கு பலம், எனவே இளையசமுதாயம் புத்தகங்களை படிக்க வேண்டும் என துரைமுருகன் கேட்டுக்கொண்டார்.
திமுக மீது உள்ள பற்று காரணமாக அதிகமாக இளைஞர்கள் வருகிறார்கள். அவர்கள் புலிக் குட்டிகளாக உள்ளார்கள். அதை பார்த்து என் கண்கள் கலங்கி விட்டது. திராவிடர் கழகம் மற்றும் திமுக வளர்ந்தது பேச்சு மற்றும் எழுத்தால் தான் எனவே இளைஞர்கள் அதிகளவு எழுத்து திறமையும் பேச்சுத் திறமையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.