அட கவனிப்பா! குடியுரிமை சட்டத்தை நாங்க எதிர்க்கவேயில்லையே!: இஸ்லாமியர்களுக்கு ஷாக் கொடுக்கும் தி.மு.க. வி.வி.ஐ.பி.
குடியுரிமை சட்டத்தை எங்கள் கட்சி எதிர்ப்பதாக ஊடகங்கள் தவறாக சொல்கின்றன. அப்படியில்லை.
* நீட் தேர்வுக்கு எதிராக, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை மத்தியரசு நிராகரித்துவிட்டது என மூன்று ஆண்டுகள் கழித்து, சிறிதும் கூச்சமின்றி, முதல்வர் இ.பி.எஸ். அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் தங்களின் படுதோல்வியை திசை திருப்பவும், மாணவர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட அநீதியை மூடி மறைக்கவும், ஆளும் அரசு திட்டமிட்டு செயல்படுகிறது.
- மு.க.ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)
* குடியுரிமை சட்டம் குறித்து மிகவும் தவறாக பிரசாரம் செய்யும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி போல, தமிழகத்தின் ஓவைசியாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார். தேசிய குடிமக்கள் பதிவேடு என்றால் என்ன என்று தெரியாமல் காங்கிரஸ் கட்சியினர் பேசிவருகின்றனர்.
- நரசிம்மராவ் (பா.ஜ.க. மேலிட பார்வையாளர்)
* குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பார்த்த, திருச்சி பாலக்கரையை சேர்ந்த அல்போன்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். கோவையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை போன்று பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்த்தவர்களின் பட்டியல் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது.
- பத்திரிக்கை செய்தி
* குடியுரிமை சட்டதிருத்தத்தை எதிர்த்து போராடியவர்கள் எந்த விசாரணையும் இல்லாமல் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்திரபிரதேச அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மாநில அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கதுடன், அது பெருத்த அவமானமான செயல்.
- மாயாவதி (பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்)
* நிடி ஆயோக் வெளியிட்டுள்ள சிறந்த மாநிலங்களுக்கான தரவரிசை பட்டியலில் பீஹார் கடைசி இடத்தில் உள்ளது. இறக்கை இல்லாத போது பறக்க முயற்சிக்க கூடாது. இந்தாண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலின் மூலம் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கியஜனதா தளம் கூட்டணி அரசை வெளியேற்றிட வேண்டும். இதுவே பீஹார் மாநிலத்தின் முன்னேற்றத்துக்கான வலுவான முதல் படியாகும்.
- லாலுபிரசாத் யாதவ் (ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்)
* குடியுரிமை சட்டத்தை அ.தி.மு.க. ஆதரிப்பதால் சிறுபான்மையின மக்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. அதனால் தோற்பது நிச்சயம் என தெரிந்தும், என் மகனையும், மகளையும் கட்சி சார்பில் போட்டியிட வைத்தேன். போர்க்களத்தில் மடியப் போவது உறுதி என தெரிந்தும் அவர்களை தியாகிகளாக தேர்தலில் நிற்க வைத்தேன். இதெல்லாம் கட்சிக்காகத்தான் செய்தேன்.
- அன்வர் ராஜா (மாஜி அ.தி.மு.க. எம்.பி.)
* தி.மு.க. பதினெட்டு ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது ஈழ தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை. அதுபோல முஸ்லிம்களுக்கும் எதுவும் செய்யவில்லை. ஆனால், இப்போது இந்த பிரிவினர் மீது மிகுந்த கருணை இருப்பது போல அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார்.
- சீமான் (நாம்தமிழர் கட்சி தலைவர்)
* தமிழகத்தில் இந்த ஆண்டு கூடுதல் இடங்களில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு பாதிப்பு ஏற்படும் போது, அவற்றை உடனடியாக கால்நடை மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்ல, ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்படுத்தப்படும்.
- ராதாகிருஷ்ணன் (கால்நடைத்துறை அமைச்சர்)
* நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலானது துளி கூட வன்முறையின்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது. வன்முறை நடக்கும் என எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட தவறான பிரசாரம் தோல்வி அடைந்துள்ளது. மக்களே பாராட்டும் படி தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
- விஜயகாந்த் அறிக்கை (தே.மு.தி.க. தலைவர்)
* குடியுரிமை சட்டத்தை எங்கள் கட்சி எதிர்ப்பதாக ஊடகங்கள் தவறாக சொல்கின்றன. அப்படியில்லை. அதில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். வெளிநாடுகளில் இருந்து வரும் அகதிகளை கருணை உள்ளத்தோடு வரவேற்க வேண்டும். மத ரீதியான பாகுபாடு வேண்டாம்! என்பதுதான் எங்களின் கோரிக்கை.
- துரைமுருகன் (தி.மு.க. பொருளாளர்)