"ஜெயக்குமார் பார்ப்பதை எல்லாம் நான் செய்வதில்லை..." துரைமுருகனின் பேச்சால் கலகலத்த சட்டப்பேரவை
சட்டப்பேரவையில் எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகனின் நகைச்சுவை பேச்சால் சிரிப்பலை நிலவியது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசினார். அப்போது, அடுத்த கல்வி ஆண்டில் திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் நாட்டுப்புறக் கலைத்துறை தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், இசை மிக அவசியமானது. இரவு நேரத்தில் இசையைக் கேட்டபடி தூங்குவது சுகமானது. தனியார் டிவி ஒன்றில் ஒளிபரப்பாகும் நாட்டுப்புறப் பாடல்கள் நன்றாக இருப்பதாகவும் அதற்கு ஏதாவது செய் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அப்போது இடைமறித்த தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், துரைமுருகன் இசையை மட்டும் கேட்பாரா? இல்லை மிட் நைட் மசாலா பார்ப்பாரா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு உடனடியாக பதிலளித்த துரைமுருகன், இரவில் ஜெயக்குமார் பார்ப்பதை எல்லாம் நான் பார்க்க மாட்டேன் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து அவையில் சிரிப்பலை எழுந்தது.