duraimurugan criticizing edappadi govt

சட்டசபையில், டிஜிபி, டிகே. ராஜேந்திரன் நியமனம் குறித்து பிரச்சனை எழுப்பிய திமுகவினர் பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து, சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சில நாட்களுக்கு முன் பான் பராக், மாவா, குட்கா விவகாரம் தனியார் தொலைக்காட்சியில் வெளியானது. அதில் பான் பராக், மாவா, குட்கா அதிபர்களிடம் அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் உடனிருந்தவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது என்று வருமான வரித்துறை ஆவணங்கள் மூலம் செய்தி வெளியிடப்பட்டது.

பான், குட்கா மேலாளர் மாதவ்ராவ் என்பவரிடம் வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த தகவல்கள் வெளியானதாக தெரியவந்தது.

இது குறித்து, 2 நாட்களுக்கு முன்பு, சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பிரச்சனை எழுப்பினார். வருமான வரித்துறை, அளித்துள்ள பட்டியலில் போலீஸ் அதிகாரிகள், கமிஷனர், டிஜிபி, போன்றவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது பற்றி கேள்வி எழுப்பினார்.

அப்போது அவையில் இருந்த முதலமைச்சர் பழனிசாமி, இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார். 

இன்று சட்டமன்றத்தில் இது குறித்து திமுக தரப்பில் நான் பேசும்போது, விசாரணை நடைபெற்று வரும்போது, விசாரணையில் இருக்கும் அதிகாரிதான், இப்போது டிஜிபியாக ஆக்கப்பட்டுள்ளார்.

விசாரணை பட்டியலில் உள்ள டி.கே. ரா.ஜேந்திரன் மீதுள்ள விசாரணை முடிந்துவிட்டதா? அவர் இப்போது குற்றமற்றவராக நிரூபிக்கப்பட்டாரா? அதன் பிறகுதான் டிஜிபி ஆக்கினீர்களா? என்று கேள்வி எழுப்பினேன். 

எதன் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரை டிஜிபி ஆக்கினீர்கள் என்று கேட்டேன். இந்த ஆட்சியில், பதவி நீக்கம் கேட்டால் பதவி உயர்வு தருவார்கள் போலும். இதை வைத்துப் பார்க்கும்போது, குட்கா விவகாரத்தில் இவர்கள் மட்டுமல்ல மேலும் சிலருக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று எண்ணத்தோன்றுகிறது என்று தெரிவித்தார்.

பத்திரிக்கைகளை மிரட்டும் வகையில், போலீஸ் அதிகாரிகள் வழக்கு போட்டுள்ளார்களே என்று கேட்டதற்கு போட்டபிறகு பார்க்கலாம்.

இவ்வாறு கூறினார்.