நள்ளிரவில் உலாவந்த போதை கும்பல்.. 1 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் பறிமுதல்.. 4 பேர் கைது.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டபோது காரை ஓட்டி வந்த நபர் சந்தேகத்திற்கிடமான வகையில் பேசி மழுப்பியதால் அவரின் உடமைகளை போலீசார் சோதனையிட்டனர்.
சென்னையில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருளை பதுக்கி வைத்து விற்று வந்த 3 பேர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை வேளச்சேரி பேபி நகர் பகுதியில் நேற்றிரவு வேளச்சேரி சட்டம் ஒழுங்கு போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டபோது காரை ஓட்டி வந்த நபர் சந்தேகத்திற்கிடமான வகையில் பேசி மழுப்பியதால் அவரின் உடமைகளை போலீசார் சோதனையிட்டனர். அப்போது போலீசாரிடம் சிக்கிய நபர் 1 கிராம் அளவிலான விலை உயர்ந்த கிரிஸ்டல் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் அளித்த தகவலின் பேரில் போதைப் பொருள் கடத்தி விற்கும் கும்பலைச் சேர்ந்த அப்துல் கலிக் (48), சேட்டு முகமது (47), பஷீர் அகமது (47) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 1,401 கிராம் கிரிஸ்டல் மெத்தபெட்டமைன் போதைப் பொருள், 2 கார், 2 இருசக்கர வாகனம் மற்றும் 7 செல்போன்களையும் வேளச்சேரி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், பிடிபட்டவர்களிடம் தொடர் விசாரணையை துணை ஆணையர் தலைமையிலான போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்குப் பின் பிடிபட்ட 4 பேரையும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.