தமிழகத்தில் நாங்கள் இருக்கும்வரை பா.ஜ.க.வின் கனவு பலிக்காது -சொன்னவர் முத்தரசன்...
புதுக்கோட்டை
தமிழகத்தில் திராவிட இயக்கமும், பொதுவுடமை இயக்கமும் இருக்கும்வரை பா.ஜ.க.வின் கனவு பலிக்காது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அதில் அவர், "லோக் ஆயுக்தா சட்டத்தில் எதிர் கட்சிகள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஊழல் நிறைந்த துறைகளான வேலைவாய்ப்பு, ஒப்பந்தம் போன்ற துறைகள் இந்தச் சட்டத்திற்கு பொருந்தாது என்று கூறியிருப்பதன் மூலமே உள்நோக்கத்தோடுதான் இந்த சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது என்பது தெரிகிறது. எனவே, இந்த சட்டத்தால் எந்த மாற்றமும் வரப்போவது கிடையாது.
பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஒருவருக்கு மிரட்டல் வந்துள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இது அந்த நீதிபதிக்கு அளிக்க கூடிய மிரட்டல் அல்ல, வழக்கை விசாரணை செய்துவரும் 3-வது நீதிபதிக்கு அளிக்கப்பட்ட மிரட்டல்.
பா.ஜ.க-வின் தேசிய தலைவர் அமித்ஷா வருகையால் தமிழகத்திற்கு எந்த அரசியல் மாற்றமும் ஏற்பட்டு விடாடது. தமிழகத்தில் திராவிட இயக்கமும், பொதுவுடமை இயக்கமும் இருக்கும்வரை பா.ஜ.க.வின் கனவு பலிக்காது. ஊழல் குறித்து அமித்ஷா கூறுவதற்கு அவருக்கு தார்மீக உரிமை உள்ளதா? என்பதை பா.ஜ.க. விளக்க வேண்டும்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டால் என்ன தவறு? என்று நீதிமன்றம் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது.
விடுதலைப்புலிகள் குறித்து இலங்கை பெண் மந்திரி கூறியிருக்கும் கருத்து வரவேற்கத்தக்கது.
தமிழகத்தில் தீவிரவாதிகள் உள்ளனர் என்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கும் குற்றச்சாட்டிற்கு, முதலமைச்சர் பதிலளிக்காமல் இருப்பதன்மூலம் மத்திய மந்திரி கூறும் கருத்து உண்மையாக இருக்குமோ? என்று சந்தேகம் எழுகிறது.
தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களின் வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருந்ததால் கிராமப்புற மாணவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகினர். இந்த நிலையில் மதுரை உயர் நீதிமன்றம் தவறான 49 கேள்விகளுக்கும் கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இதனை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் மேல் முறையீடு செய்யாமல் நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று கூறினார்.