பிரதமராகும் கனவு... தேசிய தலைவராகிறார் திருமா... இந்தியா முழுவதும் விசிகவை வளர்க்கத் திட்டம்..!
தன்னை பிரதமராக்கிக் கொள்ள வேண்டும் விசிக தலைவர் திருமாவளவனுக்கும் வந்துவிட்டது தான் ஆச்சர்யம்.
மு.க.ஸ்டாலினை பிரதமராக்க திமுகவினர் எப்படி ஆசைப்படுகிறார்களோ..? அதே ஆசை தன்னை பிரதமராக்கிக் கொள்ள வேண்டும் விசிக தலைவர் திருமாவளவனுக்கும் வந்துவிட்டது தான் ஆச்சர்யம். ஏற்கெனவே, பட்டியல் மக்கள் ஒன்றுபட்டால் பிரதமர் நாங்கதான் என விசிக தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் தெரிவித்து இருந்தார்.
தமிழகத்தில் கூட்டணி அமைத்தே இரண்டு எம்.பி.,களை மட்டுமே வைத்துள்ள விசிக எப்படி பிரதம வேட்பாளாராக திருமாவளவனை முன்னிருத்த முடியும்? அதற்காகத்தான் ஒரு சூபர் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறது விசிக.
தேசியத் தலைவராகிறார் தொல்.திருமாவளவன். தமிழ்நாட்டுக்கு வெளியிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை விரிவுபடுத்தத் தொடங்கி இருக்கிறார். இந்த ஆண்டின் இரண்டாவது நாளில், ஆந்திர பிரதேசத்தின் ஓங்கோல் மாவட்டத்தில் அம்பேத்கரின் சிலை திறப்பு விழாவில் அவர் கலந்துகொண்டுள்ளார். இதுகுறித்து விசிக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைச்செல்வன் கூறுகையில், ‘’கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் கேரளத்தில் மூணாறு மாவட்டத்திலும் விசிக செயல்பட்டுவருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் பங்கெடுத்து வருகிறது.
இடதுசாரி இயக்கத்துக்குத் தீவிர ஆதரவை அளித்துவந்த தலித் சமூகத்தவர்கள், அதற்கு மாற்றாகத் தற்போது விசிகவைப் பார்க்கிறார்கள். இடதுசாரி அமைப்புகளும், காங்கிரஸ் கட்சியும் தலித் சமூகத்தினரின் உள்ளக்கிடக்கைகளை எடுத்துரைப்பதில் தவறிவிட்டன. தென்மாநிலங்களில் தலித்துகளுக்கான தனிக்கட்சிக்குத் தேவை எழுந்துள்ளது. விசிக அக்குரலைப் பிரதிபலிக்கும். தமிழ்நாட்டில் அனைவருக்கும் பொதுவான கட்சியாக அடையாளப்படுத்திக் கொள்ள விசிக விரும்புகிறது’’ என அவர் தெரிவித்துள்ளார்.
தென் மாநிலங்களில் தலித் கட்சியாக காட்டிக் கொள்ள முயலும் விசிக தமிழ்நாட்டுக்கு வெளியே தன்னை தலித் கட்சியாகவே முன்னிறுத்துகிறது என்பது முரணாகத் தெரிகிறது. எது எப்படியோ..? அரசியலில் எதுவும் நடக்கலாம். இதனை அறிந்த திமுகவினரோ, திருமாவளவனின் இந்த பிரதமர் ஆசை, அத்தைக்கு மீசை முளைத்த கதைதான் என்கிறார்கள்.