பிரதமர் மோடி,  உள் துறை அமைச்சர் அமித் ஷா போன்றோர் பிராமணர்கள் கிடையாது. ஆனால், பிராமணர்களுக்காக வேலை பார்ப்பார்கள்.

இந்திய அளவில் பட்டியலின மக்கள் ஒற்றுமையாக இருப்பதை பாஜக உடைத்து விட்டது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மதுரையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் செஞ்சட்டை பேரணியும் மாநாடும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்று பேசினார். “வர்க்க ஆதிக்கத்தில் எதிர்ப்பு என்றாலே அது இந்துத்துவா எதிர்ப்புதான். பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு என்பதே இல்லை. ஆரிய இனத்தில் உள்ளவர்களின் மரபணு (டி.என்.ஏ.) வேறு, திராவிடர்களின் மரபணு வேறு. ஆரிய கருத்துக்கு எதிரானவர்கள் எல்லாருமே திராவிடர்கள்தான். அந்த வகையில் டாக்டர் அம்பேத்காரும் திராவிடர்தான். இந்தியா முழுவதும் வாழ்ந்தவர்கள் திராவிடர்களே. அந்தக் காலத்தில் திராவிடர்கள் நாகர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்களை தமிழர்கள் என டாக்டர் அம்பேத்கர் கூறியிருக்கிறார்.

அம்பேத்கரியம், பெரியாரியம், மார்க்சியம் போன்றவை பார்பனியத்தையும் முதாலாளித்துவத்தையும் எதிர்க்க கற்று கொடுத்தன. ஆதிக்கத்தை அடி மரத்தொடு வெட்டி விட வேண்டும். மேலே உள்ள கட்டமானத்தை வெட்டுவது முக்கியமல்ல. இந்திய அரசியலமைப்பு தேர்தல் நேரத்தில் மட்டுமே வேலை செய்கிறது. பின்னர் இந்தியாவில் மனு தர்மம்தான் வேலை செய்கிறது. வஞ்சகத்தால் வளைப்பதும் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதும்தான் ஆரியத்தின் வேலையே. இங்கே பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா போன்றோர் பிராமணர்கள் கிடையாது. ஆனால், பிராமணர்களுக்காக வேலை பார்ப்பார்கள்.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக பிராமணர்களே அதிகமாக உள்ளனர். இதை மாற்ற முடியாது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சித்பவன் என்ற பிராமணர்களே தலைவராக முடியும். ஆர்.எஸ்.எஸ்.ஸையும் சமஸ்கிருதத்தையும் எதிர்ப்பவர்கள்தான் திராவிடர்கள். தெலுங்கர்களை எதிர்ப்பது அல்ல. தந்தை பெரியார் ஆரியர்களைத்தான் எதிர்த்தார். எனவேதான், பெரியாரை ஆரியர்கள் எதிர்க்கின்றனர். இந்தியாவை வல்லசராக்குவதற்கு பதிலாக மசூதியை இடிப்பார்கள், பைபிளை எரிப்பார்கள். அகில் இந்திய அளவில் பட்டியலின மக்களை ஒற்றுமையாக இருப்பதை பாஜக உடைத்து விட்டது. சமூக நீதி என்ற கோட்பாடுதான் அவர்களை தடுக்கிறது.” என்று திருமாவளவன் பேசினார்.