தேசியம் பேசிய திராவிடக் கட்சித் தலைவர்... ஜெயலலிதா முதலாமாண்டு நினைவஞ்சலி...
தமிழகத்தின் ஆளுமை சக்தியாக இருந்து, தேசிய அளவில் பேச வைத்த ஜெயலலிதா, சென்ற ஆண்டு இதே நாளில் மறைந்ததாக அறிவிக்கப்பட்டது. சென்னை அப்பலோ மருத்துவமனையில் உடல்நலமின்றி ஐசியு.,வில் இருந்து கோமா நிலையில் இருந்து, பின்னர் மீண்டு வந்ததாகக் கூறப்பட்டு, எத்தனையோ சர்ச்சைகளுக்குப் பின், இதே டிசம்பர் 5ம் தேதி அவர் காலமானார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த தினத்தில் அவரது முதல் ஆண்டு நினைவஞ்சலியை அரசு அதிகாரபூர்வமாக நடத்திக் கொள்ள நீதிமன்றம் கூறும் அளவுக்கு அவரது மறைவு சர்ச்சையாகிப் போனது துரதிர்ஷ்டம்தான்!
டிச.5ம் தேதியான இன்று ஜெயலலிதாவின் முதலாண்டு நினைவு நாளில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது அஞ்சலியை தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதா பல்வேறு காலகட்டங்களில் அரசியல் ரீதியாக சிலருடன் பகைமை பாராட்டினாலும், பலராலும் விரும்பப் பட்ட ஒரு பெண்மணியாக இருந்துள்ளார். அவருக்கு பாஜக.,வின் மாநிலத் தலைவராக இருந்து, தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள இல.கணேசன் தன் இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்தார்.
அவரது அஞ்சலியில், “பிரிவினை வாதம், கடவுள் மறுப்பு பேசிய இயக்கத்திலிருந்து தோன்றிய ஒரு கட்சி. அதிலிருந்து வெளி வந்து தேசியத்தில், ஆன்மிகத்தில் தனக்கிருந்த நம்பிக்கையால் பிரிவினை, கடவுள் மறுப்பு வாதத்தைப் புறந்தள்ளிய முன்னாள் முதல்வர் திரு எம்.ஜி.ராமச்சந்திரன் பாராட்டுக்குரியவர்.
ஆனால் ஆன்மிகத்திலும், தேசிய ஒருமைப்பாட்டிலும் தனக்கிருந்த அபரிமிதமான ஈடுபாட்டால் பிரிவினை, கடவுள் மறுப்புக் கொள்கைகளைத் தகர்த்தெறிந்த விதத்தில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா போற்றுதலுக்குரியவர்.
வாழ்பவர்களைப் பற்றி பல விமர்சனங்களை முன் வைக்கும் நாம், மறைந்தவர்களைப் பற்றிப் பேசும் போது குணம் நாடி, குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடிப் மிக்கக் கொள்வது மரபு. அவ்விதத்தில் செல்வி ஜெயலலிதா அவர்களது ஆன்மிகத் தொண்டும், தேசியத்தில் அவருக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையுமே என் மனக் கண் முன் விரிகிறது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டி நாடெங்கும் ஹிந்து எழுச்சி அலை வீசிய சமயம். நரசிம்மராவ் தலைமையிலான அரசு 1992 நவம்பர் மாதம் 23-ஆம் தேதி தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத்தைக் கூட்டியது. கார் சேவா நடத்தலாமா, தடை விதிக்கலாமா என்பது குறித்தும் கலந்தாலோசித்தனர். பாஜக அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தாலும், அதில் கலந்து கொண்டு பேசிய அப்போதைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா கார் சேவா அனுமதிக்கப் பட வேண்டும் என வலியுறுத்திப் பேசியதை இந்தத் தேதியில் கூறாமல் வேறெந்தத் தேதியில் நினைவு கூர்வது...!?
மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு வரலாற்றில் நீங்காத இடமுண்டு. அன்னாரது ஆன்மா நற்கதி அடைய இந்நாளில் பிரார்த்திப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.