Asianet News TamilAsianet News Tamil

திராவிடம் என்பது ஆரியத்தின் கள்ளக்குழந்தை.. எல்லை மீறிய சீமான்.. அரசுக்கு பகிரங்க எச்சரிக்கை.

மொத்தத்தில், தமிழர்களை திராவிடர்கள் எனத் தவறாக அடையாளப்படுத்தியது ஒரு வரலாற்றுப்பேரவலமாகும். தமிழர்களை திராவிடர்கள் என்பதற்கு எடுத்தாள்கிற ஆதாரங்கள் யாவும் மனுஸ்மிருதி உள்ளிட்ட சமஸ்கிருத நூற்களின் குறிப்புகள் என்பதே, திராவிடம் என்பது ஆரியத்தின் கள்ளக்குழந்தை என்பதை உறுதிப்பட நிறுவுகிறது. 

Dravida is the illegal child of the Aryans .. Seeman who crossed the border .. warning to the government.
Author
Chennai, First Published Sep 3, 2021, 10:08 AM IST

சங்கத்தமிழ் இலக்கியங்கள் உட்பட எந்தவொரு தமிழ் நூல்களின் தொகுப்பிற்கும், ‘திராவிடக் களஞ்சியம்’ எனப் பெயரிட முனைந்தால் கடும் போராட்டங்களை எதிர்கொள்ளும் சூழல் ஏற்படும் என நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளில் தமிழ் நூல்களைத் தொகுத்து, அவற்றை ‘திராவிடக்களஞ்சியம்’என அடையாளப்படுத்தப்போவதாக அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பெருமைமிக்கத் தொல்தமிழர் வரலாற்று அடையாளங்கள் யாவற்றையும் தன்வயப்படுத்தும் திராவிடத்திரிபுவாதிகள் தற்போது தமிழ் நூல்களின் மீதும் கைவைக்க முனைந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழர்களை திராவிடர்கள் என்பது, தமிழ்நாட்டைத் திராவிட நாடு என்பது, தமிழ் இலக்கணத்தைத் திராவிட இலக்கணம் என்பது, தமிழர் திருநாளான பொங்கலை திராவிடர் திருநாள் என்பது, தமிழ் மாமன்னன் கரிகால் பெருவளவனைத் திராவிட மன்னன் என்பது, தமிழர் கட்டிடக்கலையைத் திராவிடக்கட்டிடக்கலை என்பது, தமிழர் நாகரீகமான சிந்துசமவெளி நாகரீகத்தை திராவிட நாகரீகம் என்பது, தமிழ் கல்வெட்டுக்களைத் திராவிடக்கல்வெட்டுக்கள் என்பது, தமிழர் பண்பாடான கீழடியைத் திராவிடப்பண்பாடெனத் திரிப்பது என தமிழர்களின் மொழி, இனம், நிலம், கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, நாகரீகம் தொடர்பான தொன்ம அடையாளங்கள் யாவற்றையும் அழித்து, அவற்றின் மீது திராவிட முத்திரை குத்தியது போதாதென்று, தற்போது, தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பதற்கான வரலாற்று பெருஞ்சான்று களாகவும், யாராலும் மறுக்கமுடியாத தரவுகள் நிறைந்த ஆவணங்களாகவுமுள்ள தமிழ் நூல்களைத் ‘திராவிடக்களஞ்சியம்’ எனும் பெயரில் அடையாள மாற்றம் செய்ய முயல்வது திராவிடத்திருட்டுத்தனத்தின் உச்சமாகும். 

இந்நாடு தமிழ்நாடு; இங்கு வாழும் மக்கள் தமிழ் மக்கள்; மொழி தமிழ்மொழி; அதில் எழுதப்பட்டவை யாவும் தமிழ் இலக்கியங்கள்; அந்த நூல்களைத் தொகுக்கின்றபோது மட்டும் எப்படித் திராவிடக்களஞ்சியமாக மாறும்? எனும் கேள்விக்கு எவரிடமும் விடையில்லை. தமிழர் தலைவர், தமிழினத் தலைவர் என்று அடைமொழிகளைத் தங்களுக்கு வைத்துக்கொண்டு, தமிழ், தமிழர், தமிழ்நாடு எனப்பேசி வாக்குகளைப் பெற்று வென்று, ஆட்சியதிகாரத்தை அடைந்துபிறகு, திராவிட இனம் , திராவிடக் களஞ்சியம், திராவிடச் சிறுத்தை என்று பேசுவது திட்டமிட்ட தமிழர் அடையாள அழிப்பு வேலையாகும். 

இப்போது திராவிடம், திராவிடர் என்று பேசுவோர், தேர்தலுக்கு முன் வாக்கு கேட்டு செல்லும்போதோ, தங்கள் கட்சி மாநாடுகளுக்கு அழைக்கும்போதோ திராவிடர்கள் என்று ஒருபோதும் கூறுவதில்லையே ஏன்? திராவிட இனம் கூறிவிட்டு நாட்டின் பெயரை மட்டும் திராவிட நாடு என்று மாற்றாமல் ஏன் தமிழ்நாடு என்று மாற்றினீர்கள்? அந்நியர்கள் தமிழர் நிலத்தில் ஆளுகை செய்யவும், அதிகாரம் செலுத்தி தமிழர்களை அடிமைப்படுத்தவும் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட அரசியல் விலங்குதான் திராவிடமாகும். அடிப்படையில், திராவிடர்கள் எனக் கூறப்படுவோர்க்கு தனித்த அடையாளங்கள் ஏதுமில்லாததால், தமிழர்களது மொழி, இன, தேச, பண்பாட்டு, வரலாற்று அடையாளங்களைத் திருடித் தன்வயப்படுத்துகிற சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர். தற்போதைய செயல்பாடும் அதன் நீட்சியேயாகும். மொத்தத்தில், தமிழர்களை திராவிடர்கள் எனத் தவறாக அடையாளப்படுத்தியது ஒரு வரலாற்றுப்பேரவலமாகும்.

தமிழர்களை திராவிடர்கள் என்பதற்கு எடுத்தாள்கிற ஆதாரங்கள் யாவும் மனுஸ்மிருதி உள்ளிட்ட சமஸ்கிருத நூற்களின் குறிப்புகள் என்பதே, திராவிடம் என்பது ஆரியத்தின் கள்ளக்குழந்தை என்பதை உறுதிப்பட நிறுவுகிறது. ஆங்கிலேயர்கள் எப்படித் தங்கள் உச்சரிப்புக்கு ஏற்றவாறு தமிழக ஊர்களின் பெயர்களை மாற்றினார்களோ, அப்படித்தான் ஆரியர்கள் கையாண்ட திராவிட உச்சரிப்பும். அதுவும் விந்திய மலைக்குத் தெற்கே வாழ்ந்த ஆரியர்களைக் குறிக்கவே திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தினர். எனவே, சொல்லளவில் பார்த்தாலும், பொருளளவில் பார்த்தாலும் திராவிடம் என்பது தமிழருக்கு எதிரானதேயாகும். தமிழர் அல்லாத வடவர்கள் செய்த உச்சரிப்புப்பிழைக்காக அதை ஒரு தேசிய இனத்தின் மீது திணிப்பது வரலாற்றுப்பெருங்கொடுமை. 

தமிழர்களின் அறிவுக்கொடையாக, கருத்துக்கருவூலமாக விளங்கும் பழந்தமிழர் இலக்கியங்கள் மீது கை வைப்பதென்பது தமிழர் இனத்தையே முற்றுமுழுதாக இல்லாதொழிக்கும் வஞ்சகச்செயலேயாகும். எனவே சங்க இலக்கியங்கள் என்றாலும் சரி, அதற்குப் பின்வந்த இலக்கியங்கள் என்றாலும் சரி எந்தவொரு தமிழ் நூல்களுக்கும் ‘திராவிட இலக்கியம்’ என்று பெயர்மாற்றம் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கால்டுவெல் என்ற ஆங்கிலேயர் ‘திராவிடம்’ என்று சொல்லிவிட்டார் என்பதற்காக தமிழ் நூல்களைத் தொகுத்து, ‘திராவிட இலக்கியம்’ என்று பெயர்மாற்றுவது, சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயர் சட்டமியற்றியதற்காக தமிழர்களை இந்துக்கள் என்று அடையாளப்படுத்தும் ஆரியர்களின் சூழ்ச்சிக்கு ஒப்பானது. 

அத்தகைய கொடுஞ்செயலை தமிழ் இளந்தலைமுறையினரும், இனமானத்தமிழர்களும் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள் என அறுதியிட்டு உரைக்கிறேன். ஆகவே, ஆளும் திமுக அரசு தனது தமிழர் அடையாள அழிப்பு முயற்சியைக் கைவிட்டு, தமிழ் நூல்களின் தொகுப்பிற்கு, ‘தமிழ்க்களஞ்சியம்’ என்றே பெயர் சூட்டவேண்டுமென வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத்தவறி, தமிழர்களின் உணர்வுகளை அலட்சியம் செய்யும்பட்சத்தில், மிகக்கடுமையான போராட்டங்களை அரசு எதிர்கொள்ளும் சூழல் உருவாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios