அம்மா சொன்னதை மறந்துடாதீங்க... ஓ.பி.எஸ்- எடப்பாடிக்கு சசிகலா எச்சரிக்கை..!
சசிகலாவின் இந்தப்பேச்சு அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், அதிமுக தலைவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்திற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் சசிகலா மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார். அவரது பேச்சு அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தி,நகர் இல்லத்தில் ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செலுத்திய பின்னர் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ‘’நான் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தேன். அப்போது தமிழக மக்கள் ஆசியுடன் நலம் பெற்று தமிழகம் வந்தேன். அதற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். புரட்சித்தலைவியின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றாக இணைந்து தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ள வேண்டும். நம்முடைய இலக்கு புரட்சித்தலைவி நமக்கு சொல்லி விட்டுச் சென்ற மீண்டும் தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாகவும் நம்முடைய ஆட்சி இருக்க வேண்டும் என்று கூறி சென்றுள்ளார்.
\
அதை மனதில் நிறுத்தி நம்முடைய உடன்பிறப்புகள் புரட்சித்தலைவியின் உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று நாம் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் ஆகும். அதை செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஏனென்றால் நீங்கள் புரட்சித்தலைவியின் உண்மை தொண்டர்கள். நிச்சயமாக இதை செய்வீர்கள். நானும் உங்களுக்கு துணை இருப்பேன் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். வரும் சட்டமன்ற தேர்தலை அதிமுக ஒன்று பட்டு சந்திக்க வேண்டும். இது நடக்குமென நம்புகிறேன். தொண்டர்களுக்கு நான் என்றும் உண்மையாக இருப்பேன். விரைவில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்திப்பேன் ’’ எனத் தெரிவித்தார்.
இதன் மூலம், எடப்பாடி, ஓ.பி.எஸ் இருவருக்கும் மறைமுகமாக ஒன்றிணைந்து அரசியல் செய்யலாம் என அழைப்பு விடுத்துள்ளார் சசிகலா. ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் இருவரும் சசிகலாவை ஒதுக்கி வைத்து விட்டு அரசியல் செய்து வருகின்றனர். இந்நிலையில் பெருந்தன்மையாக அனைவரும் இணைந்து அரசியல் செய்து எதிர்கட்சியை தோற்கடிக்க வேண்டும் என வும், அதற்காக நான் உங்களுக்கு துணையாக இருப்பேன் என்றும் சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். சசிகலாவின் இந்தப்பேச்சு அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், அதிமுக தலைவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.