8 வழிச்சாலைக்காக எங்க ஸ்கூலை இடிச்சிடாதீங்க சார் ….பல வருஷம் போராடி இப்பதான் கட்டிருக்கு !! கண்ணீர்விட்டு கதறி அழுத மாணவர்கள்…
சென்னை – சேலம் இடையே அமைய உள்ள பசுமை வழிச்சாலைக்காக புதிதாக கட்டிய அரசு பள்ளிக் கட்டடம் இடிபடும் நிலை உள்ளதால், தயவு செய்து பங்க பள்ளிக் கூடத்தை இடிச்சுடாதீங்க சார் என அளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம் மாணவர்கள் கெஞ்சி அழுத சம்பவம் நெகிழ்சி அடையச் செய்தது.
சேலம் பசுமை வழி சாலைக்காக தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த காளிப்பேட்டையில் இருந்து கோம்பூர் வரை நிலங்களை அளவிடும் பணி நடந்தது. அப்போது மஞ்சவாடி ஊராட்சி பகுதியில் விவசாயி கார்த்திக் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை வருவாய் துறை ஊழியர்களும், போலீசாரும் உடலில் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். அவரது நிலத்தை அளப்பதை விட்டுவிட்டு வேறு பகுதிக்கு சென்றனர்.
இது போன்ற பல இடங்களில் 8 வழிச்சாலைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. விவசாயிகள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் லட்சுமாபுரத்தில் செயல்பட்டு வரும் உயர்நிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு 250 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இச்தப் பள்ளியில் பெரும்பாலோனர்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்களின் குழந்தைகள்தான் படித்து வருகிறார்கள்.
குறிப்பாக சின்னமஞ்சவாடி, பெரியமஞ்சவாடி, நடுப்பட்டி, காளிப்பேட்டை, கோம்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பழங்குடியின மாணவ-மாணவிகள் தான் அதிக அளவில் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளி பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. புதிய கட்டிடம் கட்டித்தர கடந்த 15 வருடங்களாக அப்பகுதி மக்கள் போராடி பின்னர் நாங்களே தற்போது பள்ளி அமைந்துள்ள இடத்தை விலைக்கு வாங்கி அரசிடம் ஒப்படைத்தார்கள்.
இதைத் தொடர்ந்து கடந்த 2016-2017-ம் ஆண்டு அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் நபார்டு உதவியுடன் ரூ.1 கோடியே 65 லட்சம் செலவில் பள்ளி கட்டிடம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கட்டப்பட்டது. 2 தளங்கள் உள்ள இந்த கட்டிடத்தில் 25 அறைகள் உள்ளன. இந்த கட்டடம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
இந்நிலையில்தான் லட்சுமாபுரம் உயர்நிலைப் பள்ளி புதிய கட்டிடம் பசுமை வழிச்சாலைக்காக இடிபடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளும், ஊழியர்களும் போலீஸ் பாதுகாப்புடன் அந்த பள்ளி கட்டிடத்தை அளந்தபோது அங்கு திரண்டிருந்த மலைவாழ் மக்களும், மாணவ- மாணவிகளும் . சார் எங்க ஸ்கூலை இடிச்சிடாதீங்க சார் என கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்த சம்பவம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை நெகிழச் செய்தது.