Dollar Seshadri: இறுதி மூச்சு வரை திருப்பதி ஏழுமலையானுக்காக வாழ்ந்த டாலர் சேஷாத்ரி மறைவு.. வேதனையில் EPS..!
அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா ஏழுமலையான் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தான மூத்த மற்றும் சிறப்பு அதிகாரி டாலர் சேஷாத்ரி மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருமலை ஏழுமலையான் கோவிலில் 1978ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் டாலர் சேஷாத்ரி. 2007ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். எழுத்தராக பணியில் சேர்ந்து, கோவில் சிறப்பு அதிகாரி வரை பதவி உயர்வு பெற்றவர். 43 ஆண்டுகளுக்கும் மேலாக, ஸ்ரீவாரி கோவிலின் மரபுகள், சடங்குகள், கைவினைப் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் சேஷாத்ரி கவனித்து வந்தார். அதனால், ஓய்வு வயதை எட்டிய பின்பும், அவரது சேவையை தேவஸ்தானம் பயன்படுத்தி வந்தது. இறுதி மூச்சு வரை ஏழுமலையான் சேவையில் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாக, ஆந்திராவில் முதல்வராக இருந்தவர்களின் பரிந்துரைப்படி சிறப்பு அதிகாரியாக தொடர்ந்து நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் விசாகப்பட்டினத்தில் 29ம் ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழாவும், கல்யாண உற்சவமும் நடக்க இருந்த நிலையில், அதில் பங்கேற்க டாலர் சேஷாத்ரி சென்றார். கல்யாண உற்சவம் மற்றும் தீப உற்சவ ஏற்பாடுகளை முன்னின்று செய்தார். விசாகப்பட்டினத்தில் உள்ள ஏழுமலையான் கோவிலில் இரவு தங்கினார். மறுநாள் அதிகாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையத்து, அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதனையடுத்து, அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதிக்கு எடுத்து வரப்பட்டு அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி உள்ளிட்ட ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், அவரது மறைவை அறிந்து மிகும் வேதனை அடைந்தேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- திருமலை திருப்பதி தேவஸ்தான மூத்த மற்றும் சிறப்பு அதிகாரி திருமிகு. டாலர் சேஷாத்ரி அவர்கள் 29.11.2021 அன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா ஏழுமலையான் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.