நடிகையுடன் மாஜி அமைச்சர் குடும்பம் நடத்தியது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா..? சந்தேகப்படும் புகழேந்தி..!
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நடிகையுடன் ரகசியமாக குடும்பம் நடத்தியது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைதாகியுள்ளார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகையை முதலில் எனக்குத் தெரியாது என்றார். பின்னர் பணம் பறிக்கும் கும்பல் என்றார். பிறகு ரூ.5 லட்சம் பணம் கொடுத்திருப்பதாகச் சொன்னார். அப்புறம் அடுக்குமாடியில் தன்னுடன் வாடகைக்கு குடியிருந்ததாக கூறினார். இவ்வளவு காரியங்களை செய்த மணிகண்டனை இன்னும் கட்சியிலிருந்து நீக்கவில்லை. அவரை ஏன் கட்சியிலிருந்து நீக்கவில்லை?
ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால், ஒரே நொடியில் மணிகண்டனை தூக்கி எறிந்திருப்பார். இவர்கள் ஏன் மணிகண்டனுக்கு துணைபோகிறார்கள் என்பது விசாரணையில் நிச்சயம் தெரியவரும். 2019-ஆம் ஆண்டு அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டனை ஏன் நீக்கினார்கள்? அந்த நடிகை மணிகண்டனை மட்டும் சந்திக்கவில்லை. மேலும் சில அமைச்சர்களையும் சந்தித்துள்ளார். 5 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த மணிகண்டன் ரகசியமாக குடும்பம் நடத்தியது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா?
தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமியை காவல்துறை விசாரிக்க வேண்டும். மணிகண்டன் பாலியல் வன்கொடுமை உள்பட 6 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆனால், நீதிபதி பாலியல் வன்கொடுமை பிரிவை நீக்குமாறு கூறுவது வழக்கு சரியான பாதையில் செல்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்று புகழேந்தி தெரிவித்தார்.