documents seized in vijayabaskar house
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரி துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், ஆர்.கே.நகர் பண பட்டுவாடா தொடர்பான, பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதை அடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நிறுத்தி வைப்பது குறித்து, தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.
அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இயக்குனர் குழந்தை சாமி, எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

அதில் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான பல இடங்களில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பண விநியோகம் தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் சிக்கின.
அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட 256 பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு, தலா 4 ஆயிரம் ரூபாய் வீதம் பணம் பட்டுவாடா செய்வதற்கான குறிப்புகள் இடம் பெற்றிருந்தன.
அதன்படி சுமார் 90 கோடி ரூபாய் அளவுக்கு, பண பட்டுவாடா செய்வதற்கு திட்டமிடப்பட்டிருப்பதை வருமானவரி துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனுவாசன் உள்ளிட்ட 6 அமைச்சர்களுக்கு பணப்பட்டுவாடா விவகாரத்தில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் தற்போது ஊடகங்களில் வெளியாகி உள்ளன. எனவே, பண பட்டுவாடா குறித்த விவரங்கள் அனைத்தையும், தலைமை தேர்தல் ஆணையர் கேட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், பண பட்டுவாடாவை காரணம் காட்டி ஆர்.கே.நகர் தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம் என்றும், அதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம், இன்றோ அல்லது நாளையோ வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
