கொரோனாவுக்கு தனி ஆம்புலன்ஸ் தேவை..!! மற்றவர்களுக்கு நோய் பரவும் ஆபத்து . பகீர் கிளப்பும் மருத்துவர்கள்..!!
108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து மருத்துவத்துறை ஊழியர்களுக்கும் ,தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு ஊதியத்தை வழங்கிட வேண்டும்.மத்திய மாநில அரசுகள், மருத்துவத்துறை பணியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்திட வேண்டும்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தனி ஆம்புலன்ஸ் ஒதுக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் ,கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை ,கிருமி நீக்கம் செய்யாமலேயே, இதர நோயாளிகளுக்கும் பல்வேறு இடங்களில் பயன்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா பாதிப்புக் கென்று தனியாக 108 ஆம்புலன்ஸ்களை ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு நோயாளிக்கும் பயன் படுத்திய பிறகு முழுமையாக கிருமி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவ்வாறு செய்யாவிடில் 108 ஆம்புலன்ஸ் மூலம் இதர நபர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. இந்தப் பிரச்சினையில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு உரிய அறிவுறுத்தல்களை வழங்கிட வேண்டும்.
மருத்துவர்கள் மருத்துவக் குழுவினருக்கு தற்காப்புச் சாதனங்கள், உடைகள், (PPEs),ஹேஷ் மேட் ஷூட் (HazMat Suit) போன்றவற்றை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். மத்திய அரசு,மருத்துவக் குழுவினருக்கு காப்பீடாக ரூ 50 லட்சம் போடப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்து. ஆனால் இது மட்டும் போதாது. காப்பீட்டு தொகை மட்டுமின்றி, அரசே நேரடியாக ரூபாய் 2 கோடி முதல் ரூபாய் 3 கோடி வரை இழப்பீடு வழங்க வேண்டும். அது இளநிலை,முது நிலை மருத்துவத்துறை மாணவர்களுக்கும் ,பயிற்சி மருத்துவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். ஒப்பந்த அடிப்படையில், தற்காலிக, வெளிக் கொணர்தல் முறையில் பணி புரியும் அனைத்து மருத்துவத் துறை ஊழியர்களுக்கும் , 108 ஆம்புலனஸ் ஊழியர்கள், அமரர் ஊர்தி ஊழியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த இழப்பீட்டை வழங்கிட வேண்டும். உடல்நல ரீதியான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்பிற்கு ஏற்றவாறு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து மருத்துவத்துறை ஊழியர்களுக்கும் ,தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு ஊதியத்தை வழங்கிட வேண்டும். மத்திய மாநில அரசுகள், மருத்துவத்துறை பணியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்திட வேண்டும். மீண்டும் கொரோனா பரிசோதனையை குறிப்பிட்டக் கால இடைவெளிகளில் அவ்வப் பொழுது செய்திட வேண்டும்.
அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க வேண்டும். பல்வேறு நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் மிகக் குறைவான நபர்களுக்கு கொரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் உண்மையான எண்ணிக்கையை கண்டறிய முடியவில்லை. இது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் பாதிக்கிறது. எனவே,பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
கொரோனா வார்டுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தங்கும் வசதிகளை மருத்துவமனைகளிலேயே ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.இதன் மூலம் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா பரவுவதை தடுக்க முடியும்.போக்குவரத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும் இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.