ஹெச்.ராஜா, தன்னுடைய ஆதரவாளர்களை ஏவிவிட்டு, எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். 

தேர்தல் செலவுக்காக கொடுத்த பணத்தில் மோசடி செய்து ரூ 4 கோடியில் வீடுகட்டுவதாக ஹெச்.ராஜா மீது குற்றம்சாட்டிய, காரைக்குடியை சேர்ந்த பாஜக நிர்வாகி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியில் பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிட்டார். ஆனாலும் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியிடம் தோல்வியை தழுவினார். இந்நிலையில் காரைக்குடி நகர பாஜக தலைவராக இருந்த சந்திரன், கடந்த மாதம் 22ஆம் தேதி தனக்கும், தனது குடும்பத்தாருக்கும், ஹெச்.ராஜா தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக மாவட்ட தலைவரிடம் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறி புகார் கடிதம் அளித்தார். 

அதில், ‘’நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது, உண்மையாகவும், நேர்மையாகவும் உழைத்தேன். ஆனால் ஹெச்.ராஜா, தான் செய்த தவறுகளை மறைப்பதற்காக பாஜக நகர நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு கூறி வருகிறார். ஹெச்.ராஜா, தன்னுடைய ஆதரவாளர்களை ஏவிவிட்டு, எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் அதற்கு ஹெச்.ராஜாவும், அவருடைய ஆதரவாளர்களும்தான் பொறுப்பு. கட்சிப் பதவியில் இருப்பதற்கு அச்சமாக இருக்கிறது. கட்சிப் பொறுப்பில் இருந்து தான் விலகுகிறேன் எனத் தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில், பாஜகவின் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் கடந்த 26-ஆம் தேதி காரைக்குடி வருகை தந்தார். ஹெச்.ராஜாவின் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வந்திருப்பதாக கட்சி நிர்வாகிகளிடைய பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் மாநில அமைப்பு செயலாளர் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக வந்ததாக தெரிவித்து சென்றுவிட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred



இதனை அடுத்து ஹெச். ராஜா மீது புகார் அளித்த காரைக்குடி நகர தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு மண்டல தலைவர் பாலமுருகன், கண்ணங்குடி மண்டல தலைவர் ஆகியோர் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜனால் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.