என்னுடைய சுய கௌரவத்தை பாதுகாக்கும் வகையில், கட்சியில் ஏதாவது ஒரு பொறுப்பை தர வேண்டும்.

மு.க.அழகிரி விவகாரத்தில் அடுத்தடுத்து புதிய, புதிய செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ரஜினியுடன் இணையப்போகிறார், பாஜகவுக்கு பாயப்போகிறார். புதிய கட்சி காணப்போகிறார் என்பதெல்லாம் சொந்த ஆதாயங்களுக்காக அவரது தரப்பே கிளப்பிவிட்ட கதைகள் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

5 முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியின் குடும்ப சொத்து மதிப்புகளைக் கேட்டால் யாருக்கும் தலைசுற்றும். இந்த சொத்துக்களை கட்சியின் பெயரிலும், முரசொலி பெயரிலும் அறக்கட்டளைகளை ஏற்படுத்தி கருணாநிதி நிர்வகித்து வந்தார். மொத்த சொத்து மதிப்பு 40 ஆயிரம் கோடியைத் தாண்டும் என்கிறார்கள். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு இந்த அறக்கட்டளைகள் அனைத்தும் ஸ்டாலின் வசம் வந்துவிட்டது. 

முரசொலி அறக்கட்டளையில் உதயநிதி முக்கிய பொறுப்பு வகிக்கிறார். இதேபோல திமுக அறக்கட்டளைகளில் ஸ்டாலினும், அவரது சொல்லை தட்டாத சிலரும் அங்கம் வகிக்கின்றனர். கருணாநிதி இருந்த காலத்திலேயே இந்த அறக்கட்டளைகளில் ஏதாவது ஒன்றில் தனது மகன் துரை தயாநிதியை இடம்பெறச் செய்ய அழகிரி எவ்வளவோ முயன்றார். ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் ஸ்டாலின் இதனை சாமர்த்தியமாகத் தடுத்துவிட்டார்.

 குடும்ப உறவுகளும் அழகிரிக்கு ஆதரவு அளிக்காததால் அவரது முயற்சி வீணானது. அழகிரி விவகாரம் இப்போது மீண்டும் சந்திக்கு வந்திருக்கும் நிலையில் குடும்ப உறவுகள் சிலர் அவரிடம் சமாதானம் பேசினார்கள். ஆரம்பத்தில் அழகிரி சமாதானத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. ‘’என்னை அவமதித்தவர்களுக்கு நான் யார் என்பதைக் காட்டுகிறேன்’’என உறவுகளிடம் கொந்தளித்தார் அழகிரி. ஆனாலும், சகோதரி செல்வியின் தளராத முயற்சியினால் தற்போது அவர் பிடிவாதத்தை தளர்த்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

‘’நான் எந்த தனி நபருக்கோ அல்லது வேறு கட்சிக்கோ ஆதரவளிக்கவில்லை. அதேசமயம் என்னுடைய சுய கௌரவத்தை பாதுகாக்கும் வகையில், கட்சியில் ஏதாவது ஒரு பொறுப்பை தர வேண்டும். அத்துடன் முரசொலி அறக்கட்டளையில் உதயநிதி இருப்பது போல திமுக அறக்கட்டளையில் எனது மகன் துரை தயாநிதிக்கு இடமளிக்க வேண்டும். இரண்டில் ஒன்றை மட்டுமே தருவதாக இருந்தால் துரை தயாநிதிக்கான பொறுப்புதான் முக்கியம். இதை செய்யச் சொல். அப்புறம் மற்றதையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்’’என செல்வியிடம் கூறியிருக்கிறார் அழகிரி.

அழகிரியின் இந்த டிமாண்டை ஸ்டாலினிடம் செல்வி தெரிவித்திருக்கிறார். விஷயம் மெல்ல மெல்ல லீக் ஆக, செனடாப் சாலை வீட்டு கிச்சன் கேபினெட்டில் பூகம்பமே வெடித்திருப்பதாக கூறுகிறார்கள்.