வைகோவை மதிக்காத திருநாவுக்கரசர்..! அடிக்கப்பாய்ந்தாரா ம.தி.மு.க. நிர்வாகி..? திருச்சி தி.மு.க. கூட்டணியில் திகுதிகு உட்கலவரம்..!
நமக்கு எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர்கள், முதலமைச்சராக வரத்துடிக்கும் நபர்கள் பூரண அறிவு, ஜீவகாருண்யம், சகிப்புத்தன்மை உள்ளிட்ட பெரும் நற்குணங்கள் பொங்கி வழியும் நபர்கள் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய மடத்தனம்! அவர்களும் பொறாமை, குறுக்கு குணம், சகிப்புத்தன்மையற்ற நிலை! நிறைந்த மனிதர்கள்தான் என்பதை அடிக்கடி உணர்த்திக் கொண்டே இருப்பார்கள்.
தி.மு.க.வின் கூட்டணியில் இணைந்திருக்கும் காங்கிரஸ், ம.தி.மு.க. கம்யூனிஸ்டுகள், வி.சி.க., கொ.ம.தே.க. உள்ளிட்ட கட்சிகளிடையே உணர்வுப்பூர்வமான தோழமை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அட, அவற்றின் இரண்டாம் நிலை நிர்வாகிகளுக்குள்ளேயோ அல்லது தொண்டர்களுக்கு மத்தியிலோ முட்டல் மோதல் இருந்தாலும் கூட பரவாயில்லை. ஆனால் தலைவர்களுக்குள்ளேயே பிணக்கு இருந்தால் எப்படி? இதோ திருச்சிதான் அதற்கு செம்ம உதாரணம்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸின் மாஜி மாநில தலைவர் திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார். இவரை சொந்தக் கட்சியின் எதிர்கோஷ்டியினரே புறக்கணிக்கின்றனர். இந்த குழப்பம் ஒருபுறம் இருக்க, மற்ற கட்சியினரும் அவர் மீது கடுப்பில் உள்ளனர். காரணம், வேட்பு மனு தாக்கலின் போது தங்களைத் தவிர வேறு யாரையும் அவர் தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை என்பதுதான்.
இந்த சூழலில் அந்தநல்லூர் பகுதியில் வாக்கு சேகரிக்கும்போது, அரசர் மீது பெரும் கோபம் கொண்டு அடிக்கவே பாய்ந்துவிட்டார் ம.தி.மு.க.வின் ஒன்றிய செயலாளர் கே.பி.எம்.ராஜா! என்று பெரும் பஞ்சாயத்து உருவானது. ம.தி.மு.க.வினர் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கின்றனர் என்று அரசர் அலறியேவிட்டார்.
சரி, ஏன் அரசர் மீது ராஜா இப்படி பாய்ந்தாராம்? அவரிடமே கேட்டால்...”மறைந்த கருணாநிதியில் துவங்கி, ஸ்டாலின், சோனியா, ராகுல், முத்தரசன், பாலகிருஷ்ணன், திருமா ஆகிய கூட்டணி தலைவர்களின் பெயரைக் குறிப்பிடுறார். ஆனால் எங்க தலைவர் வைகோவின் பெயரை மட்டும் சொல்லவே மாட்டேங்கிறார். ஏதோ ஒரு தடவை, ரெண்டு தடவை மிஸ் ஆச்சுன்னா பரவாயில்லை. எப்பவுமே இப்படியே தவிர்க்கிறதை எப்படி ஏத்துக்க முடியும்? அப்ப, ம.தி.மு.க.வின் ஓட்டுக்கள் அவருக்கு வேண்டாமா?” என்று பாய்கிறார்.
மிஸ்டர் அரசர், ஒண்ணு ரெண்டு வாக்குகள் வித்தியாசத்துலேயும் சிலர் தேர்தலில் தோற்ற கதை உங்களுக்கு தெரியுமோ?