கிறிஸ்தவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையெல்லாம் சர்ச்சுகள்தான் தீர்மானிக்கின்றன என்று இந்து மக்கள் கட்சி தலைவர்  அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். 

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவருடைய வீட்டில் அர்ஜூன் சம்பத் சந்தித்து பேசினார். திமுக அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக நதிகளை காக்க ரூ. 950 கோடியை ஒதுக்க நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் எழுத்துபூர்வமாக பதில் தெரிவித்துள்ளார். இது தமிழகத்துக்குக் கிடைத்த வரப்பிரசாதம். சென்னை, நெல்லை, கோவை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நதிகளை பாதுகாக்க இதைத் தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழக வளர்ச்சி திட்டங்களில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. எனவே, மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல், இணக்கமாக தமிழக அரசு செயல்பட வேண்டும். தமிழக வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஜார்ஜ் பொன்னையா பேசிய பேச்சுக்காக அவர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். கிறிஸ்துவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையெல்லாம் சர்ச்சுகள்தான் தீர்மானிக்கின்றன. இதில் ஆயர்கள் பேரவையின் கருத்து என்ன? 
சர்ச்சுகளை மத வழிபாட்டுக்காகப் பயன்படுத்த வேண்டும். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை பாதிரியார் சொல்லலாம் என்றால், ஒட்டு மொத்த கிறிஸ்தவர்களையும் அரசியல் நடவடிக்கைகள் மூலமாக கிறிஸ்தவ மத நிறுவனங்கள் கட்டுப்படுத்துவது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. சர்ச்களில் அரசியல் தீர்மானிக்கப்படுவது மதசார்பற்ற தன்மைக்கு ஆபத்து. இதில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக கிறிஸ்தவ நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும். முதல்வர் கிறிஸ்தவ சபைகளை அழைத்து பேசவேண்டும். தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred