நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு.. ஆனால், மழுப்பிய உதயநிதி.
நீட் தேர்வு தொடர்பாக ஏ.கே.ராஜன் குழு அளிக்கும் அறிக்கையை கலந்தாலோசித்து அரசு நல்ல முடிவு எடுக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு தொடர்பாக ஏ.கே.ராஜன் குழு அளிக்கும் அறிக்கையை கலந்தாலோசித்து அரசு நல்ல முடிவு எடுக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகததில் ஏ.கே.ராஜன் குழுவிடம் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்த அறிக்கையை திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்; நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து அறிக்கை ஏ.கே ராஜன் குழுவிடம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். ஏ.கே.ராஜன் குழு வெளியிட உள்ள அறிக்கையை கலந்து ஆலோசித்து அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று கூறிய அவர், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாகவும் கூறினார்.
மேலும், ஆகஸ்ட் மாதம் நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே திமுக அரசின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.