கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளையும் திமுக ஜெயிக்கணும்... உடன்பிறப்புகளுக்கு உத்தரவுப் போட்ட செந்தில்பாலாஜி.!
கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் திமுக வென்றது என்பதை திமுக தலைவரிடம் தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
கோவையில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளருமான வி.செந்தில் பாலாஜி பங்கேற்று பேசுகையில், “திமுக ஆட்சி எப்போது வரும் என ஏங்கியவர்கள் நம் தொண்டர்கள் எனத் தெரியும். இதற்காகக் கடினமாக உழைத்தவர்களும் நீங்கள்தான். ஆனால், 100 சதவீதம் பேரில் 20 சதவீதம் பேர் சரியாக அவர்களுடைய பணியைச் செய்யவில்லை. அந்த 20 சதவீதம் பேர் யார் என்பதை களை எடுத்துவிட்டால் இயக்கம் வெற்றி பெறும். நமக்கு ஏன் அந்த நிலை வந்தது என எண்ணிப் பார்க்க வேண்டும்.
பொதுமக்களின் தேவைகளை அறிந்து நாம் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மக்களுக்குப் பணியாற்றக்கூடிய வாய்ப்பு இப்போது நம்மிடத்தில் உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம். தேர்தல் தேதிக்காகக் காத்திருக்க வேண்டாம். இப்போதே நாம் நம்முடைய தேர்தல் பணியைத் தொடங்க வேண்டும். கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் திமுக வென்றது என்ற வாசகத்தை திமுக தலைவரிடம் தெரிவிக்க வேண்டும்.” என்று செந்தில் பாலாஜி பேசினார்.