அரசு ஊழியர்களின் வாக்குகளில் வெற்றிபெற்று விட்டு அவர்களுக்கே ஆப்பு வைத்த திமுக.. CV.சண்முகம் கடும் தாக்கு.!
உலகத்திலே தனக்கு மட்டும்தான் பொருளாதாரம் தெரியும் என்பது போல் பேசும் நிதி அமைச்சர் பேசி வருகிறார். 5 முறை வெற்றி பெற்று கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த திமுக, தற்போது திறனற்று செயல்பட்டு வருகிறது
தவறான குற்றச்சாட்டு மூலம் அதிமுகவை அழித்து விடலாம் என திமுக நினைத்தால் அது நடக்காது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
மயிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாட்டார்மங்கலம் பகுதியில் வல்லம் தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில், உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு, கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், இன்று இந்த ஆட்சி நடப்பது அரசு ஊழியர்களால் தான். இன்று அதிமுக 45 தொகுதிகளில் தோற்றது என்றால் அதன் பின்னணியில் 1,83,000 வாக்குகள் முக்கிய காரணமாக உள்ளது. இந்த 1,83,000 வாக்குகள் அரசு ஊழியர்களின் வாக்குகள். இன்று அவர்களுக்கே ஆப்பு வைத்திருக்கிறார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். அரசு ஊழியர்கள் எல்லாம் கொள்ளைக்காரர்கள் என்பதுபோல பேசியுள்ளார்.
திமுக, ஆட்சிக்கு வரும்போது ஒன்று சொல்வார்கள்; வந்த பிறகு ஒன்று சொல்வார்கள். உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வழியாக இவர்களுக்கு நாம் எச்சரிக்கை மணி அடிக்க வேண்டும். தவறான குற்றச்சாட்டு மூலம் அதிமுகவை அழித்து விடலாம் என திமுக நினைத்தால் அது நடக்காது. உள்ளாட்சி தேர்தலில் தொண்டர்கள் கடுமையாக உழைத்தால் அதிமுக வெற்றி உறுதி என்றார். உலகத்திலே தனக்கு மட்டும்தான் பொருளாதாரம் தெரியும் என்பது போல் பேசும் நிதி அமைச்சர் பேசி வருகிறார். 5 முறை வெற்றி பெற்று கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த திமுக, தற்போது திறனற்று செயல்பட்டு வருகிறது என சி.வி.சண்முகம் விமர்சனம் செய்துள்ளார்.