மாரியம்மன் கோவிலில் கைவிரலை துண்டித்துக் கொண்ட திமுக தொண்டர்.. ஸ்டாலின் முதல்வராக நேர்த்திக் கடன்.
குருவையா நேற்று அதிகாலையில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்குச் சென்று திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று வேண்டி தனது கை விரலை துண்டித்து உள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டி தொண்டர் ஒருவர் தனது கை விரலைத் துண்டித்து நேர்த்திக் கடன் செலுத்தியுள்ளார். இது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் திமுக பிரமுகர் குருவைய்யா என்பவர் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று தனது கை விரலை துண்டித்து நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் குருவையா வயது 66 இவருக்கு பழனி ஈஸ்வரி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர் வேலை செய்து வரும் இவர் தீவிர திமுக விசுவாசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2011 மற்றும் 16 தேர்தல்களில் திமுக தோல்வி அடைந்து ஆட்சி அமைக்கவில்லை என்ற விரக்தியில் இருந்து வருகிறார். இதனால் இவர் ஆண்டுதோறும் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு கிடாய் வெட்டி பொங்கல் வைத்து வேண்டி வருகிறார்.
இந்நிலையில் இந்த ஆண்டு சட்டப் பேரவை பொது தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் அனைத்து பகுதிகளிலும் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் குருவையா நேற்று அதிகாலையில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்குச் சென்று திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று வேண்டி தனது கை விரலை துண்டித்து உள்ளார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து இருக்கன்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.