சேப்பாக்கத்தில் செம்ம அடி வாங்கிய பாமக... முதல் தேர்தலிலேயே கெத்து காட்டும் உதயநிதி ஸ்டாலின்...!
திமுகவை பொறுத்தவரை இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் மீது அதிக கவனம் குவிந்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, மநீம, அமமுக, நாம் தமிழர் ஆகிய 5 கட்சிகள் போட்டியிட்டன. இருப்பினும் வாக்கு எண்ணிக்கையின் படி திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி வேளச்சேரி, ஈரோடு மேற்கு, தி.நகர், ராயபுரம், அண்ணாநகர், கூடலூர், உதகை, குன்னூர், ஆண்டிப்பட்டி, பெருந்துறை, திருச்சி, மன்னார்குடி, ஆயிரம் விளக்கு, அரவக்குறிச்சி உள்ளிட்ட 79 இடங்களில் திமுக கூட்டணியினர் முன்னிலையில் உள்ளனர். அதேபோல், அதிமுக கூட்டணியினர் கடலூர், காட்பாடி, கும்பகோணம், ஆரணி, மொடக்குறிச்சி உள்ளிட்ட 58 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.
திமுகவை பொறுத்தவரை இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் மீது அதிக கவனம் குவிந்துள்ளது. காரணம் முதன் முறையாக தேர்தலில் களம் காணும் உதயநிதி வெல்வாரா? அல்லது வீழ்வாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. 9.30 மணி அளவிலான தபால் வாக்கு எண்ணிக்கையின் படி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் 3 ஆயிரத்து 317 வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏவிஏ. கஸ்ஸாலி ஒரு வாக்குகளை கூட பெறாமல் மிகவும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.