கொரோனா போல திமுகவும் உருமாறிடுச்சு... அமைச்சர் ஜெயக்குமார் மரண கலாய்..!
கொரோனா உருமாறியது போல ஊழலில் திமுக உருமாறியுள்ளது எனத் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை வில்லிவாக்கத்தில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்த ஆண்டு கொரோனா இல்லாத ஆண்டாக இருக்க வேண்டும். எப்படி கொரோனா உருமாறி உள்ளதே அது போல திமுகவும் ஊழலில் உருமாறியுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களால் எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. இந்த விவகாரத்தில் தூங்குவது போல திமுக நடித்துக்கொண்டிருக்கிறது.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வருவதற்காக சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டத் தேவையில்லை. சட்டப்பேரவை கூட்டம் எப்போது கூட்டவேண்டும் என்பது சட்டப்பேரவைக்குத் தெரியும். கடந்த 2019-ம் ஆண்டில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையில் கூட்டணி இல்லை. அப்போது அதிமுக தலைமையில்தான் கூட்டணி இருந்தது. அதேதான் இப்போதும் பொருந்தும். அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும்.” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.