Dmk Alliance : மதிமுக- சிபிஎம்க்கு எத்தனை தொகுதி.? திமுக கூட்டணியோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
திமுகவுடன் நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், இரண்டு மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் வழங்க வேண்டும் மதிமுக சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதே போல கடந்த முறை வழங்கியதை விட கூடுதல் தொகுதிகளை ஒதுக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![DMK talks with MDMK and CPM parties regarding parliamentary seat allocation KAK DMK talks with MDMK and CPM parties regarding parliamentary seat allocation KAK](https://static-ai.asianetnews.com/images/01hnse6qmmjrda4yyzf9gk2nd2/whatsapp-image-2024-02-04-at-12-20-06-pm_363x203xt.jpg)
திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
நாடாளுமன்ற தேர்தல் தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. தமிழகத்தை பொறுத்து வரை திமுக மற்றும் அதிமுக தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, ஒருங்கிணைப்பு குழுக்களை அமைத்துள்ளது. அந்த வகையில், திமுக தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளோடு தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அதன் படி முதல் கட்டமாக காங்கிரஸ் கட்சியோடு தொகுதி பங்கீட்டை தொடங்கியது. அப்போது காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 12 தொகுதிகளை கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால் திமுகவோ 7 முதல் 8 தொகுதிகளை வழங்கவே திட்டமிட்டுள்ளது.
கூடுதல் தொகுதிகளை கேட்ட சிபிஎம்
இதனை தொடர்ந்து நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனையடுத்து இன்று மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சம்பத் கூறுகையில், திமுகவுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. இரு தரப்பும் மனம் திறந்து பேசினோம்.
அனைத்து கட்சிக்கும் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என விருப்பம் இருக்கும். அதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூடுதல் இடங்களில் போட்டியிட விருப்பத்தை தெரிவித்தோம். எனவே இரண்டு தரப்புக்கும் இடைய சமூகமான உடன்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. முதலமைச்சர் நாடு திரும்பியதும் சுமூகமான உடன்பாடு எட்டப்படும் என கூறினார்.
2 மக்களவை, 1 மாநிலங்களவை
இதனை தொடர்ந்து மதிமுக குழுவோடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக அவைத்தலைவர் அர்ஜூன் ராஜ், பேச்சுவார்த்தை சுமூகமாக திருப்திகரமாக மகிழ்ச்சியாக இருந்தது. மதிமுக சார்பாக இரண்டு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி கேட்டுள்ளோம். முதலமைச்சர் தமிழகம் திரும்பிய பிறகு இறுதி முடிவு தெரியும். கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம், எனவே இந்த முறை எங்களது கட்சி சின்னத்தில் போட்டியிடுவோம் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
Governor Ravi : ஆளுநர் ரவி திடீர் டெல்லி பயணம்.. அமித்ஷாவை சந்திக்க திட்டமா? காரணம் என்ன.?