திமுகவுக்கு தற்காலிக ஞாபக மறதி நோய் வந்துடுச்சு.. திமுக அரசின் பட்ஜெட்டை ஒற்றை வார்த்தையில் வாரிய அண்ணாமலை!
அதிகாரத்துக்கு வருவதற்காக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் குறுகிய காலத்திலேயே 'அம்னீஷியா' ஏற்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக அரசின் 2021-22-க்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரியில் நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்த நிலையில் எஞ்சிய 6 மாதங்களுக்கான பட்ஜெட்டை திமுக அரசு இன்று தாக்கல் செய்தது. நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். தேர்தல் அறிக்கையில் திமுக பல வாக்குறுதிகளை அளித்திருந்த நிலையில், இந்த பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த பட்ஜெட்டுக்கு ஆதரவாகவும் எதிராகவும் அரசியல் கட்சிகள் கருத்து கூறி வருகின்றன. அந்த வகையில் பட்ஜெட்டை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், “திமுக அரசு தனது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. இதில் எதிர்பார்த்ததைப் போலவே தமிழகத்துக்கு எந்த தொலைநோக்குத் திட்டமும் இல்லை. வழக்கம்போல நம்முடைய மத்திய அரசின் திட்டங்களுக்குப் புதிய பெயர் சூட்டப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல சரியாக நிர்வகிக்கவில்லை என்று முந்தைய அரசும் விமர்சிக்கப்பட்டு இருக்கிறது. அதிகாரத்துக்கு வருவதற்காக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் குறுகிய காலத்திலேயே 'அம்னீஷியா' ஏற்பட்டுள்ளது'' என்று அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.