dmk says ttv is a true admk
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ‘சுயேட்சை வேட்பாளர் தினகரனிடம் தி.மு.க. தோற்றுவிட்டதே!’ எனும் நக்கலான விமர்சனத்துக்கு விடை சொல்லப்போய் அது தினகரனுக்கு ஆதரவான கருத்தாக மாற்றப்பட்டுவிட, இப்போது முழி பிதுங்கி நிற்கிறார் தென் சென்னை தி.மு.க. மா.செ.வான மா.சுப்ரமணியன்.
அவர் சொன்ன கருத்து இதுதான்...
“தினகரனை நாங்கள் தனி ஆளாக ஏற்று கொள்ளவில்லை. அவர் ஒரு பக்கா அ.தி.மு.க. காரர். பன்னீர்செல்வம், பழனிசாமி போன்றவர்கள் அவரை ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் இதுதான் உண்மை. அரவிந்த் கெஜ்ரிவால் போல திடீரென அரசியல் களம் புகுந்தவர் அல்ல தினகரன். ஏற்கனவே அ.தி.மு.க. எம்.பி.யாக பதவி வகித்தவர். பழைய தேர்தல்களில் அ.தி.மு.க. சார்பில் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதற்கு மூளையாகச் செயல்பட்டவரே தினகரன் தான்.
தற்போது தனியாக வந்த பின்பும் அதே டெக்னிக்கை பின்பற்றி, வெற்றி பெற்றிருக்கிறார். தேர்தல் முடிந்த பின்பும் கூட தினகரன் ஆதரவாளர்களிடம் பணம் கேட்டு மக்கள் தகராறு செய்திருக்கிறார்கள். இதுவே அவர் தேர்தலில் செய்த முறைகேடுகளுக்கு சாட்சி.”என்று தினகரனை உயர்த்துவது போல் உயர்த்தி பின் விமர்சித்து சமாளித்திருக்கிறார்.
கூடவே “தி.மு.க.வை பொறுத்த வரையில் ஒரு வட்டத்திற்கு மூவாயிரம் உறுப்பினர்கள் இருப்பார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் ஏழு வட்டங்கள் உள்ளன. அதன்படி தி.மு.க.வினரின் மொத்த எண்ணிக்கை இருபத்தியோறாயிரம்.
தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைத்த ஓட்டுக்கள் ‘இருபத்து நான்காயிரத்து சொச்சம்’. ஆக எங்கள் கட்சியின் வாக்குகள் எங்களுக்கு விழுந்துவிட்டது நிரூபணமாகிறது.
ஆனால் பாரம்பரியமாக தி.மு.க.விற்கு ஓட்டு போட்டு வந்த மக்களின் வாக்குகள் சிதறி விட்டது என்பதுதான் உண்மை.
கடந்த முறை பண பட்டுவாடாவை காரணம் காட்டித்தான் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த தேர்தலில் 89 கோடி ரூபாய் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. இது பற்றி எங்கள் கழகத்தின் சார்பில் எவ்வளவோ புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆக இந்த தேர்தலில் தோற்றது மத்திய அரசும், தேர்தல் கமிஷனும்தானே தவிர தி.மு.க. அல்ல.” என்றிருக்கிறார்.
