அம்மா உணவகத்தை தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பரிசு பெட்டக திட்டமும் திமுக ஆட்சியில் புறக்கணிக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள ‘அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்’ என்ற திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2015 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் தொடங்கிவைத்தார். இந்த திட்டம் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இத்திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், பிறந்த குழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்குத் தேவையான ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பராமரிப்புத் துண்டு, குழந்தைக்கான உடை, படுக்கை, கொசு வலை, நாப்கின், எண்ணெய், ஷாம்பூ, சோப்பு, நகவெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, கை கழுவும் திரவம், பிரசவித்த தாய்க்கு சோப்பு, பிரசவித்த தாயின் ஆரோக்கிய மற்றும் தாய்ப்பாலை அதிகரிக்க சௌபாக்கியா சுண்டி லேகியம் என தாய் மற்றும் பச்சிளம் குழந்தையைப் பராமரிக்க தேவையான 16 வகையான பொருட்கள் உள்ளடக்கி இருக்கும்.

இத்திட்டம் தாய்மார்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. திமுக ஆட்சிக்கு பிறகு அதிமுகவின் திட்டங்களை அழித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. குறிப்பாக அம்மா உணவகம்,மருந்தகம் என தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், குழந்தைகளுக்கு வழங்கப்படும் பரிசு பெட்டக திட்டமும் புறக்கணிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. 

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள தாய் சேய் நல பிரிவில் பிறக்கும் குழந்தைகளின் தாய்மார்களிடம் வழங்க வேண்டிய அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதேபோல் அரசு மருத்துவமனைகளில், பிரசவிக்கும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை, அவர்கள் வீட்டிற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லும் வகையிலும், சிகிச்சை முடிந்த, 1 வயதிற்கு உட்பட்ட, உடல் நலம் குன்றிய குழந்தைகளை, வீட்டிற்கு அழைத்து செல்லவும் தொடங்கப்பட்ட '102' என்ற தாய் சேய் நல வாகன சேவை திட்டத்தின் கீழ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 5க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

ஆனால், தற்போது தாய் சேய் வாகனங்கள் முடக்கப்பட்டு உள்ளது என்றும், பிரசவிக்கும் தாய்மார்களை அழைத்து செல்ல வாகனங்கள் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் தமிழக அரசு மீது புகார்கள் கூறுகின்றனர்.அதனால், வாடகை வாகனங்கள் ஆட்டோக்களை பிடிப்பதற்காக பச்சிளங்குழந்தைகளோடு வெயிலில் நடந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும், குழந்தைகளுக்கு காற்றின் மூலமாக நோய்கள் பரவும் சூழலும் உருவாகின்றது. வாகன வாடகை கூட வழங்க முடியாத நிலையில் பேருந்தில் பச்சிளங்குழந்தைகளை அழைத்து செல்லும் நிலையும் உள்ளது. 

வாடகை வாகனங்களை மருத்துவமனைக்குள் அனுமதிக்காத நிலையில் தாய்மார்கள் நடந்தே செல்லக்கூடிய சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே இரு திட்டங்களும் உடனடியாக தாய்மார்களுக்கு கிடைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தாய்மார்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மட்டுமல்லாமல் தமிழகம் முழுக்க இந்நிலையையே தொடர்கிறது என்று ஆளுங்கட்சியான திமுக மீது குற்றஞ்சாட்டுகின்றனர் பொதுமக்கள்.