பேரழிவு காலத்தில் மக்களைக் காக்கும் மருந்தை இலவசமாகக் கொடுக்க வேண்டியது ஒரு மக்கள் நல அரசின் கடமை. அந்தக் கடமையை ஏதோ மக்களுக்கு, தான் காட்டும் மாபெரும் சலுகையைப் போல பழனிசாமி நினைத்துக் கொள்கிறார் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

பீகார் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அனைவருக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக அளிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் பாஜக தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும்’ எனத் தெரிவித்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பு தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசின் செலவில் இலவசமாக அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று ஏதோ பெரிய சாதனை வாக்குறுதி போல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பேரழிவு காலத்தில் மக்களைக் காக்கும் மருந்தை இலவசமாகக் கொடுக்க வேண்டியது ஒரு மக்கள் நல அரசின் கடமை. அந்தக் கடமையை ஏதோ மக்களுக்கு, தான் காட்டும் மாபெரும் சலுகையைப் போல பழனிசாமி நினைத்துக் கொள்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாய் நிற்கும் மக்களுக்கு 5 ஆயிரம் நிதி உதவி செய்ய மனமில்லாத முதல்வர், இலவசத் தடுப்பூசி என்று அறிவிப்பதன் மூலமாகத் தன்னை தாராளப் பிரபுவாகக் காட்டிக் கொள்ளப் போடும் நாடகத்தைக் காணச் சகிக்கவில்லை!” என மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.