அணை திறக்க இன்னும் 18 நாட்கள் மட்டுமே இருக்கிற நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள கால்வாய்கள் அனைத்தையும் தூர் வாரி விடுவார்களா? மேட்டூரில் ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும் நீர் கடைமடைப் பகுதிக்கும் சென்றடையுமா என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது. துறை அமைச்சரின் அலட்சியம் அணையிலிருந்து வரும் காவிரி நீரும் விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்குமா என்பது ‘பதில்’ தெரியாத புதிராகவே இப்போது வரை இருக்கிறது.
வழக்கம் போல் தூர்வாரும் பணிகள் அமோகமாக நடந்துவிட்டது போன்ற ‘கற்பனை’த் தோற்றத்தை உருவாக்கி ‘கணக்கு’க் காட்ட முயற்சிக்காமல் - காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய சங்கப் பிரதிநிதிகளையும் கண்காணிப்புக்குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவிலேயே முதன்முதலாக அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்குகிற ஒரே ஒரு ஆட்சி, அதை அறிமுகப்படுத்திய ஆட்சி, திமுக ஆட்சிதான்” - இவை, கருணாநிதி தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில், 06-04-1998 அன்று பதிவு செய்துள்ள பொன் முழக்க வரிகள். அதுமட்டுமல்ல, கூட்டுறவுக் கடன்களை அனைத்து விவசாயிகளுக்கும் முதன்முதலில் தள்ளுபடி செய்த ஆட்சியும் திமுக ஆட்சிதான்.
விவசாயிகளின் மேம்பாட்டுக்காகவும் தமிழக வேளாண் தொழில் வளர்ச்சிக்காகவும், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்னோடியாகத் தமிழ்நாட்டில்தான் திமுக ஆட்சியில், தொலைநோக்குத் திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டு - விவசாயிகளுக்கு உதவும் கரங்களாக விளங்கியது. ஆனால் இன்றைக்கு, “தும்பை விட்டு வாலைப்பிடிப்பது” போல், ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று அறிவித்துவிட்டு - இப்போது தூர் வாரும் பணிகளை அறிவித்திருக்கிறது அதிமுக அரசு.


ஆகவே காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். வழக்கம் போல் அதிகாரிகளை நியமித்து, அவர்களிடமிருந்து ஆய்வு அறிக்கைகள் பெற்று- தூர்வாரும் பணிகள் அமோகமாக நடந்துவிட்டது போன்ற ‘கற்பனை’த் தோற்றத்தை உருவாக்கி ‘கணக்கு’க் காட்ட முயற்சிக்காமல் - மேற்கண்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய சங்கப் பிரதிநிதிகளையும் கண்காணிப்புக்குழுவில் இடம்பெறச் செய்து; கால்வாய் தூர் வாரும் பணிகளில் எவ்வித முறைகேட்டுக்கும் இடம் தராமல் வெளிப்படையாகவும் - வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் குறுவை சாகுபடிக்கு உண்மையிலேயே கடைமடை வரை தங்கு தடையின்றி, பயன்பட்டிடும் வகையில் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என அறிக்கையில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
