மோடி அரசுக்கு நெருக்கடி கொடுக்க மு.க.ஸ்டாலினின் பலே திட்டம்… ஒடிசா முதலமைச்சரை சந்தித்த கனிமொழி.!
பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத 12 மாநிலங்களில் முதலமைச்சர்களின் ஆதரவை பெற்று நீட் தேர்வுக்கு முடிவுகட்ட ஸ்டாலின் முயற்சித்து வருகிறார்.
பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத 12 மாநிலங்களில் முதலமைச்சர்களின் ஆதரவை பெற்று நீட் தேர்வுக்கு முடிவுகட்ட ஸ்டாலின் முயற்சித்து வருகிறார்.
மருத்துவம் படிக்கும் கனவுடன் இருந்த பல மாணவ, மாணவிகளின் உயிரைக் குடித்த நீட் தேர்வை தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்வோம் என்று திமுக தொடர்ச்சியாக கூறி வந்தது. திமுக தேர்தல் அறிக்கையிலும் இது முக்கிய வாக்குறுதியாக இடம்பெற்றது. இந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஸ்டாலின் முதலமைச்சரானதும் முதல் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே நீட் தேர்வின் பாதிப்பை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அளித்த அறிக்கையின்படி சட்டமசோதாவை தயார் செய்த மு.க.ஸ்டாலின், பிற மாநிலங்களிலும் இதற்கான ஆதரவை திரட்ட முடிவு செய்தார். அதன்படி பாஜக ஆட்சியில் அல்லாத 12 மாநிலங்களை, நீட் தேர்வுக்கு எதிராக ஒருங்கிணைக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை ஏற்கெனவே கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திரா, தெலுங்கானா முதலமைச்சர்களிடம் திமுக எம்.பி.-க்கள் நேரில் சந்தித்து வழங்கியுள்ளனர். அந்த வகையில் திமுக மாநில மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்றக் குழு துணைத் தலைவருமான கனிமொழி, ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்து, ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையை வழங்கினார். அப்போது நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும், நவீன் பட்நாயக்கிடம் கனிமொழி வழங்கினார். இந்த சந்திப்பின்போது இருவரும் பரிசுப் பொருட்களையும் பகிர்ந்துகொண்டனர்.