இந்தி தெரியாத நீங்கள்லாம் இந்தியரா..? சென்னை ஏர்போர்ட்டில் கனிமொழியிடம் முரண்டு பிடித்த சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி
சென்னை விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் பெண் அதிகாரி ஒருவர் திமுக எம்பி கனிமொழியிடம், இந்தி தெரியாத நீங்கள் இந்தியரா என்று கேட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திமுக எம்பி கனிமொழி, நாடாளுமன்றத்தின் துறைசார் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள, டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார் கனிமொழி. பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லிக்கு புறப்படும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் டெல்லி செல்வதற்காக கனிமொழி வந்துள்ளார்.
அப்போது, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை(சி.ஐ.எஸ்.எஃப்) பெண் அதிகாரி ஒருவர், கனிமொழியிடம் ஏதோ இந்தியில் கேட்க, அதற்கு, தனக்கு இந்தி தெரியாது என்பதால், ஆங்கிலம் அல்லது தமிழில் கேட்குமாறு கனிமொழி கோரியுள்ளார். அதற்கு அந்த பெண் அதிகாரி, நீங்கள் இந்தியரா? என்று தன்னை கேட்டதாக கனிமொழி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், எப்போதிலிருந்து இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்ற நிலை உருவானது என்றானது எனு கனிமொழி கேள்வியும் எழுப்பியுள்ளார்.
கனிமொழி இந்த டுவீட் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்படும் எனவும், பாதுகாப்பில் இருக்கும் சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரிகள் மொழி குறித்த எந்த கேள்வியையும் எழுப்பமாட்டார்கள் என்றும் சி.ஐ.எஸ்.எஃப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.