விரக்தியில் திமுக எம்.எல்.ஏக்கள்... கு.க.செல்வம் மூலம் ஸ்கெட்ச் போடும் பாஜக..!
திமுக தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், திமுக வேட்பாளர் பட்டியலில் 15 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் சீட் தரப்படவில்லை.
சீட் கிடைக்காத விரக்தியில் விருகம்பாக்கம் தொகுதியை சேர்ந்த தனசேகரன் திமுக தலைமைக்கு எதிராக கொதித்தெழுந்து வருகிறார். நேற்று அண்ணா அறிவாலயம் சென்ற அவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று ராஜினாமா கடிதம் கொடுத்து வேட்பாளர் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இது திமுக தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், திமுக வேட்பாளர் பட்டியலில் 15 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் சீட் தரப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் அவர்கள் அதிமுக, பாஜக பக்கம் தாவ திட்டமிட்டுள்ளனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் முன்னாள் அமைச்சர் மைதீன்கான், ரங்கநாதன், வாகை சந்திரசேகர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வென்ற டாக்டர்.சரவணன் உள்ளிட்ட 15 எம்.எல்.ஏக்களுக்கு இடமளிக்கப்படவில்லை. இந்த முறையும் சீட் கிடைக்கும் என நம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு தலையில் இடி விழுந்தது போலாகிவிட்டது. கட்சித் தலைமை மீது கடும் கோபத்தில் இருக்கும் இவர்கள் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
‘’உங்களை அவமதித்தவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்’’என ஆதரவாளர்கள் பலரும் இவர்களை உசுப்பேற்றி வருகின்றனர். இதனிடையே கொதிப்பில் இருக்கும் இவர்களை தங்கள் பக்கம் கொண்டுவர பாஜக காய்நகர்த்தி வருகிறது. திமுகவிலிருந்து பாஜகவுக்கு வந்த கு.க செல்வத்திடம் இதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஒருசிலர் அதிமுகவின் கதவைத் தட்டத் தொடங்கியிருப்பதாகவும் செய்திகள் வளைய வருகின்றன. இப்படி அணிமாற திட்டமிட்டிருப்பவர்களை திமுக தலைமையிலிருந்து தொடர்புகொண்டு,’’அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். ஆட்சி அமைந்ததும் உங்களுக்கு வேறு மாதிரியான கவனிப்புகள் கிடைக்கும்’’என சொல்லி வருகிறார்களாம்.