ஐசியூவில் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன்.. மூச்சு விடுவதில் தொடர்ந்து சிரமம்..?
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவக்குழுவினரின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவக்குழுவினரின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக கட்சியின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வந்தார். நேற்று முன்தினம் முன்னாள் திமுக தலைவர் கலைஞரின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக ஏற்பாடுகளை செய்து வந்தார். இந்நிலையில், உடல்நலக் குறைவால் இரண்டு நாட்களாக தனிமைப்படுத்திக் கொண்ட அவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவ ஆய்வு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள, திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜெ. அன்பழகனின் உடல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேசிய முதல்வர் அரசு சார்பில் என்ன உதவி வேண்டுமானாலும் உடனடியாக செய்யுங்கள்.
மேலும், தேவைப்பட்டால் தமிழக அரசில் பணியாற்றும் சிறப்பு மருத்துவர்களை உடனடியாக ரேலா மருத்துவமனைக்கு அனுப்பி வையுங்கள் என்று முதலவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும், ஜெ.அன்பழகனுக்கு மூச்சு விடுவதில் ரொம்ப சிரமம் இருப்பதால் தொடர்ந்து வென்லேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும், அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது தமிழக அரசு கேட்டறிந்து வருகிறது.