சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.  

அப்போது அவருடன், அரசு அதிகாிகள் அமைச்சர் நாசர் , திமுக நகர செயலாளர் மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆய்வுக்கு முன்னதாக சாமி தரிசனம் செய்த அவர், கோயில் வளாகம் சன்னதி தெருவில் அமைந்துள்ள கடைகளில் ஆய்வு செய்தார். கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பக்தர்கள் தங்கும் விடுதி மற்றும் கோயில் திருமண மண்டபம் ஆகியவற்றை ஆய்வு செய்து கோவிலை சுற்றிலும் அதிகளவில் குப்பைகள் இருப்பதாக கோயில் இணை ஆணையரை கண்டித்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘ 7 மாதங்களில் 100க்கும் மேற்பட்ட கோவில்களில் ஆய்வு செய்து செய்யவேண்டிய பணிகள் குறித்து மாதம் தோறும் ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறோம். இந்த திருவேற்காடு கோவிலில் 2006 ம் ஆண்டுக்கு பிறகு திருப்பணி நடக்கவில்லை. அன்னதான கூடம் கட்ட வேண்டும், கோ சாலை கூடுதலாக அமைக்க உள்ளோம், திருமண மண்டபம் சீரமைக்க உள்ளோம், கோவிலை சுற்றியுள்ள குப்பைகளை அகற்ற சொல்லி உள்ளோம், பூங்கா அமைக்க உள்ளோம், உபயதாரர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 30 கோடி நிதியில் திருப்பணி மேற்கொள்ள உள்ளோம் என்று கூறினார். 

மேலும், ‘ இந்த பணிகளுக்கு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டுவோம். ஒரு போராட்டத்திற்கு மூன்று தேதி அறிவித்த கட்சி, ஒரே கட்சி இன்றைய எதிர் கட்சியான அதிமுக மட்டும்தான். உபயதாரர்கள் நிதி வரும் என நம்புகிறோம் இல்லை என்றாலும், தமிழக முதல்வரிடம் எடுத்து கூறி பணிகள் செய்யப்படும். புத்தாண்டு தினத்தில் கோயிலில் சாமி தரிசனம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்’ என தெரிவித்தார்.