மாஜி ஜெயிலுக்கு போறார்.! ஜெயிலுக்கு போறார்.!! நல்லா பார்த்துக்க.. ஆரம்பமாகிறதா கைது மேளா?
போரில் எதிரியை வெல்ல இரண்டு வழிகள். ஒன்று எதிரியை விட நாம் பலமாக இருக்க வேண்டும். இரண்டு, நம்மோடு சண்டை செய்ய முடியாத அளவுக்கு எதிரியை முடக்க வேண்டும். தேர்தல் அரசியலுக்கும் இதே யுக்திகள்தான்..
போரில் எதிரியை வெல்ல இரண்டு வழிகள். ஒன்று எதிரியை விட நாம் பலமாக இருக்க வேண்டும். இரண்டு, நம்மோடு சண்டை செய்ய முடியாத அளவுக்கு எதிரியை முடக்க வேண்டும். போருக்கு மட்டுமல்ல தேர்தல் அரசியலுக்கும் இதே யுக்திகள்தான் பொருந்தும். இந்த இரண்டு சாய்ஸ்களில் இரண்டாவதை பயன்படுத்திதான் அ.தி.மு.க.வை சாய்க்க ஸ்கெட்ச் போட்டிருக்கிறது தி.மு.க.
ரியலி?..... ஆமா!
அதாவது கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்ப்பலை எதுவும் வெளியே தெரியவில்லை. அதனால் ‘மீண்டும் கழக ஆட்சி! ஹாட்ரிக் அடிக்கப்போறோம்!’ என்று குஷியாகவே காணப்பட்டனர் அ.தி.மு.க.வினர். ஆனால் ‘ஆட்சி மாறுவது உறுதி, நாம் வெல்வது நிச்சயம்!’ என்று மிக மிக உறுதியான நம்பிக்கையோடு இருந்தார் ஸ்டாலின். அவரது நம்பிக்கை வென்றது.
ஆம், ‘தி.மு.க. வெல்லாது! இல்லையென்றால் மார்ஜினில் வென்று கூட்டணி ஆட்சி அமையும்’ என்று அ.தி.மு.க. நடுநிலையாளர்களும், அரசியல் விமர்சகர்களும் கூறிய கணிப்பை எல்லாம் பொய்யாக்கிவிட்டு அதிரிபுதிரியாக, அதிலும் முரட்டு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தது தி.மு.க. ஆக தன் எதிரியான அ.தி.மு.க.வை விட பலம் வாய்ந்தவன் நான்! என தி.மு.க. நிரூபித்துவிட்டதாகவே பெருமிதப்படுகிறார் முதல்வர்.
அதேவேளையில் சமீபத்தில் நடந்த, விடுபட்ட மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் அதன் இடைத்தேர்தல்களிலும் அமோகமான வெற்றியை தி.மு.க. பதிவு செய்திருக்கிறது. இந்நிலையில், கூடிய விரைவில் வர இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. அண்ட்கோவை அமோக வெற்றியில் அடிச்சு தூக்கிட திட்டம் போட்டுள்ளது தி.மு.க. இதற்கு இரண்டாவது யுக்தியை கையாளப் போகிறார்கள்.
அதன் படி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. முக்கியஸ்தர்கள், மாஜி மந்திரிகள் யாருமே தேர்தல் பணிகளை செய்ய இயலாத வண்ணம், அரசியல் வேலைகளில் மூழ்கிடா வண்ணம் அவர்களை பல வழக்குகளால் நெருக்கித் தள்ளிடும் முடிவுக்கு ஆளும் கட்சி அதிகார மையங்கள் வந்துள்ளன என்று தகவல்.
அரசு வேலை வாங்கித் தருவதாக சொல்லி பணம் வசூலித்து ஏமாற்றிவிட்டார் எனும் புகாரில் ஏற்கனவே மாஜி ஆவின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறையில் இருக்கிறார். ஏற்கனவே மாஜி போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, முன்னாள் மின்சாரம் மற்றும் டாஸ்மாக் அமைச்சர் தங்கமணி, மாஜி பத்திரப்பதிவு துறை அமைச்சர் வீரமணி உள்ளிட்ட சில மாஜி அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றபட்டுள்ளன.
கிடப்பில் இருக்கும் இவ்வழக்குகளை துரிதமாக கையிலெடுத்து விரைவில் அடுத்தடுத்து இவர்களை கைது செய்தல், தொடர் விசாரணைக்கு அழைத்தல் போன்ற அதிரடி அலைக்கழிப்புகளில் காவல்துறை இறங்கப்போவதாக தகவல்கள் வந்து விழுகின்றன.
என்னதான் அந்த கைதுகள் ‘இந்தா பாரு நானும் ஜெயிலுக்கு போறேன்’ லெவல் ஃபார்மல் கைதுகளாக இருந்தாலும், அவர்களை தேர்தல் பணியை பார்க்க விடாமல் முடக்குவதே தி.மு.க.வின் எண்ணமாம்.
ஓஹோ!