நாங்க வாங்குன அடியை விட அவுங்க வாங்குன அடி ரொம்ம்ம்ப பெருசு பாஸ்: காயத்துக்கு கன்னாபின்னாவென மருந்து போடும் தி.மு.க.
ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. முன்வைப்பு பணத்தையும் இழந்து, முக்காடு போட்டுக் கொண்ட விவகாரம் தேசிய அளவில் அக்கட்சிக்கு சிறுமையை தந்துள்ளது.
இந்நிலையில் இந்த சரிவு குறித்து ஆய்வு செய்ய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அது தந்த அறிக்கையின் அடிப்படையில் ஆர்.கே.நகர் தொகுதியிலடங்கும் தி.மு.க.வின் 14வது வட்டக் கழகம் முழுமையாக கலைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் இந்த தோல்வி நிலை குறித்து கடும் விமர்சனம் வைக்கும் எதிர்கட்சிகளுக்கு பழைய உதாரணம் ஒன்றை மேற்கோள்காட்டி பேசும் அக்கட்சியின் காசி.முத்துமாணிக்கம்...
“கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் பென்னாகரத்தில் நடந்த இடை தேர்தலில் தி.மு.க. சுமார் எழுபத்து எட்டாயிரம் வாக்குகள் பெற்றது. அப்போது எதிர்கட்சியாக இருந்த அ.தி.மு.க. வெறும் இருபத்து ஏழாயிரம் வாக்குகள் பெற்று டெப்பாசிட் இழந்தது. அந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிரான விழுந்த வாக்குகள் என்பது அ.தி.மு.க.மற்றும் பா.ம.க. வாக்குகள் மட்டுமே. நாங்கள் பெற்ற வாக்குகளை விட எதிர்ப்பு வாக்குகள் குறைவு.
ஆனால் ஆர்.கே.நகரிலோ ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் ஒருலட்சத்து பதின்மூன்றாயிரம். இது என்ன சொல்கிறதென்றால், இந்த ஆட்சி வேண்டவே வேண்டாம் என சொல்கிறது.
ஆக இந்த ஆங்கிளிலில்தான் இதை பார்க்க வேண்டும். இடைத்தேர்தலில் எதிர்கட்சி டெப்பாசிட் இழப்பது ஒன்றும் தமிழகத்தில் புதிதில்லை. எங்களை விட படு மோசமாக அ.தி.மு.க. தோற்றுள்ளது.
எனவே இந்த தோல்வி எங்களுக்கு வருத்தம்தான். ஆனால் அதற்காக நாங்கள் உடைந்து போகவில்லை.” என்கிறார்.
யோசிங்க பாஸ்!