‘இது உலக மகா நடிப்பு’... ஜல்லிக்கட்டு நாயகன் ஓபிஎஸை சொந்த மண்ணிலேயே கலாய்த்த ஸ்டாலின்!
திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தேனிமாவட்டம் போடிநாயக்கனூரில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வாக்கு சேகரிப்பு, பிரச்சாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். நேற்று தாராபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றனர்.
மோடியை வரவேற்று பேசிய ஓ.பி.எஸ்., ‘இந்தியாவை வல்லரசுக்கெல்லாம் வல்லரசாக மாற்றிய பிரதமர் மோடி அவர்களே! எல்லா வல்லமையும் பெற்ற அண்ணன் முருகன் அவர்களே! தமிழகத்தை பொறுத்த வரையில் நிஜ ஜல்லிக்கட்டு நாயகன் மோடி தான். என வரவேற்றார் அடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள். அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணி; நாட்டுக்கு நன்மை செய்யக் கூடிய கூட்டணி. நாட்டின் உயர்வுக்காக ஒருநிமிடத்தை கூட வீணாக்காமல் பாடுபட்டு வருகிறவர் பிரதமர் மோடி என புகழாரம் சூட்டினார்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தேனிமாவட்டம் போடிநாயக்கனூரில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமரை ஜல்லிக்கட்டு நாயகன் என புகழ்ந்தது குறித்து விமர்சித்துள்ளார். பொதுமக்களிடையே உரையாற்றிய ஸ்டாலின்: ஜல்லிக்கட்டு நாயன் என பிரதமர் மோடியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகழ்ந்தது உலக மகா நடிப்பு, இளைஞர்களின் புரட்சியால் தான் தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் வன்னியர் உள் இட ஒதுக்கீடு தற்காலிகமானது என ஓ.பி.எஸ். கூறியுள்ளதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், வன்னியர் உள் ஒதுக்கீடு என்ற பெயரில் அதிமுக - பாமக நாடகமாடுவதாகவும், திமுக ஆட்சிக்கு வந்ததும் முறையான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.