தாறுமாறா எழுதும் நெட்டிசன்களுக்கு ஆதரவு !! திமுக வழக்கறிஞர் அணி தடாலடி !!
வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக தாறுமாறாக எழுதும் நெட்டிசன்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தமிழக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என திமுக வழக்கறிஞர் அணி எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக வலைதளத் தோழர்களை மிரட்டும் வகையில் வழக்குள் பதிவு செய்திட காவல் துறையைப் பயன்படுத்தும் ஆளும் அதிமுக அரசுக்கு திமுக சட்டத்துறை சார்பில் கடும் கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நாள்தோறும் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமந்து திரியும் ஆளும் அதிமுக அரசு, தனது அதிகார மமதையில், ஜனநாயகத்தின் குரல் வளையை நெரித்திடும் வகையில் ஜனநாயக ரீதியில் கருத்துக்களை எடுத்து வைத்திடும் எதிர்க்கட்சியினர் மீது வழக்கு தொடுத்து மிரட்டிப் பார்ப்பது வாடிக்கையாகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்..
ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் பதிவிடும் கருத்துக்கு கருத்து, பதிலுக்கு பதில் என மறுப்புக் கருத்துக்கனை கூறிட, வகையற்ற, திராணியற்ற காரணத்தினால் அவர்கள் மீது பொய் வழக்குளை அதிமுக தொழில் நுட்ப அணியினர் மூலம் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்து, மிரட்டிப் பார்ப்பதை திமுக சட்டத் துறை வன்மையாக கண்டிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாக ரீதியில் கருத்துத் சுதந்திரத்தை காத்திடும் கழகத் தோழர்களுக்கு என்றென்றும் திமுக சட்டத்துறை துணை நிற்பதோடு அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை சட்ட ரீதியாக எதிர் கொள்ளும் என்றும் திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.