இந்த வருமான வரித்துறை மிரட்டலுக்கெல்லாம் திமுக அஞ்சாது.. மத்திய அரசை எகிறி பாய்ந்து அடிக்கும் திருமாவளவன்..
ஆனால், அதிமுகவினர் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் எவ்வளவு தாராளமாக பணப்புழக்கம் செய்கிறார்கள் என்ற உண்மை எல்லோருக்கும் தெரியும். ஆனால் பத்தாண்டு காலமாக ஆட்சியில் இல்லாத திமுகவினரின் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு செய்வது அநாகரிகமானது.
திமுகவினரின் வீடுகளில் ரெய்டு செய்வதன்மூலம் திமுகவின் வெற்றியை தடுத்து விடமுடியாது என்றும், மத்திய அரசின் இந்த மிரட்டல் நடவடிக்கைகளுக்கு திமுக ஒருபோதும் பணியாது எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது அதிமுக-திமுக என இரண்டு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக இம்முறை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாஜக தேர்தலை சந்திக்கிறது. எப்படியேனும் இரட்டை இலக்க வெற்றிகளுடன் சட்டமன்றத்திற்குள் நுழைந்துவிட வேண்டும் என பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
இதுவரை இல்லாத அளவிற்கு சட்டமன்ற தேர்தல் களம் வெப்பமடைந்துள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் திமுகவை சேர்ந்த தலைவர்கள் வீடுகளில் சோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள மு.க ஸ்டாலின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. வீடு மற்றும் அலுவலகங்கள் என மொத்தம் 4 இடங்களில் நடைபெறும் சோதனையில், 25க்கு மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல திமுக அண்ணா நகர் தொகுதி வேட்பாளர் மோகன் மற்றும் அவரது மகன் வீடு அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது. இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திட்டமிட்டு திமுகவினரின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது.
ஆனால், அதிமுகவினர் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் எவ்வளவு தாராளமாக பணப்புழக்கம் செய்கிறார்கள் என்ற உண்மை எல்லோருக்கும் தெரியும். ஆனால் பத்தாண்டு காலமாக ஆட்சியில் இல்லாத திமுகவினரின் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு செய்வது அநாகரிகமானது. இந்த அச்சுறுத்தலுக்கு திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒருபோதும் பணியாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த அச்சுறுத்தல் நடவடிக்கையால் திமுகவின் பணிகள் தொய்ந்து விடும் என்று எண்ணினால்அது அவர்களுக்கு ஏமாற்றத்தையே அளிக்கும். மத்தியஅரசின் இப்போக்கை விடுதலை சிறுத்தைகள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் இந்த உருட்டல் மிரட்டல்களை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் உரிய பாடத்தை அவர்கள் கற்பிப்பார்கள். இது போன்ற அச்சுறுத்தும் நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.